ஒற்றன்..!

March 2020

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை குழப்ப கூழ் குடிக்க கூட்டி சென்ற கூட்டமைப்பு..

கேப்பாபுலவு மக்கள் கடந்த மூன்று ஆண்டு காலமாக தமக்குரிய காணியை விடுவிக்கும் படி ஜனநாயக ரீதியான போராட்டத்தை முன்னெடுத்து வந்துள்ள நிலையில் மூன்று ஆண்டு நிறைவு நாளான இன்றைய தினம் 02.03.2020 தமது சொந்த நிலங்களை விடுவிக்ககோரி கேப்பாபுலவு பிரதான இராணுவ முகாமிற்கு முன்பாக மீண்டு ஒரு கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நேரடியாகவும் ஊடகங்கள் மூலமும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொது அமைக்களுக்கும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக அழைப்பு விடுத்திருந்தனர்.

இந் நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள இருந்த ஒரு பகுதி மக்களை தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக பஸ் வண்டியில் ஏற்றிச் சென்று தனது பரப்புரைகளை நிறைவுபெற்ற பின் முல்லைத்தீவில் உள்ள செம்மலை பகுதியில் கூழ் காச்சி குடித்து கும்மாளமிட்டுள்ளார்.

கேப்பாபுலவு மக்களின் மூன்றாண்டு கால போராட்டத்தை சின்னாபின்னப்படுத்துவதற்காக இராணுவமும் புலனாய்வுத்துறையும் பல நெருக்கடிகளை கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராண்டாக பிரித்து போராட்டத்தை மலினப்படுத்தி வரும் இந் நிலையில் அவர்கள் மேற்கொண்ட அதே வேலையை தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தன்னெழுச்சியாக மக்கள் முன்னெடுத்த போராட்டங்களான காணி விடுவிப்பு அரசியல் கைதிகள் விடுதலை காணமல் ஆக்கப்பட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை தங்களது சுயலாப அரசியல் இருப்பிற்காக பிரித்து கையண்டு வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கும் இந் நேரத்தில் சிவமோகன் அவர்கள் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு இவ்வாறன கீழ்த்தரமான செயலை மேற்கொண்டது கேப்பாபுலவு மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் யுத்த காலத்தில் காயப்பட்டு வந்தவர்களுக்கு ஒரு பனடோலைக் கூட இலவசமாக வழங்காதவர் இன்று தேர்தலுக்காக கூழ் காச்சி விருந்தளிக்கின்றார்.

போரினாலும் சுணாமியினாலும் பேரழிவை சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பல துன்பங்களை சந்தித்து வரும் நிலையில் அந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் காணிவிடுவிப்புக்காகவும் அரசியல் கைதிகளின் விடுதலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை மகாவலி குடியேற்றம் போன்ற போராட்டங்களை முன்னின்று செய்ய வேண்டிய இவர்கள் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த செய்தியை ஊடகங்களும் புலம்பெயர்ந்த மக்களும் ஏனைய அனைத்து தமிழ் உறவுகளும் புரிந்து கொண்டு பாதிக்கப்பட்டுள்ள கேப்பாபுலவு மக்களின் காணி விடுவிப்புக்காக குரல்கொடுக்க முன்வர வேண்டும்.