ஒற்றன்..!

January 2023

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

இது இனி இரகசியம் அல்ல பரகசியம் தான் உள்ளூர் ஆட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இடம்பெற்றுவரும் நிலையில் ஜாம்பவான் என தன்னைத் தானே அழைக்கும் நபர் யாழ்.மாநகர முதல்வர் ஆகிவிட வேண்டும் என்ற கனவோடு காத்திருக்கும் இரகசியம் இரகசியமாகவே முடிந்து விடும் போல.

தான் தான் ஜாம்பவான் எனக் கூறிக்கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை விட ஏனைய பல பதவிகளைக் தேடி பருத்தித்துறை முனையிலிருந்து தெய்வேந்திர முனை வரை ஓடியவர்.

நீங்கள் யாராவது கேட்கக்கூடும் ஏன் ஜம்பவான் பருத்தித்துறை முனைக்கு போனவர் என அதற்கு பல காரணங்கள் இருக்கிறது இறுதி வரை பாருங்கள் கூறுகிறேன்.

ஆசை இல்லாதவன் மனிதன் அல்ல ஆனால் ஆசைப்படுவதற்கு தகுதி, தராதரம், சமூகப் பண்பு என்பன ஒருவருக்கு இருப்பது ஆரோக்கியம்.

யாழ்.மாநகரசபைத் தேர்தலில் யாழ்ப்பாண ஜம்பவான் ஒருவர் போட்டியிடப் போவதாக அவரே தகவலை கசிய விட்டுள்ளமை சுவாரசியமான விடயம்.

அடேய் யாரப்பா அந்த ஜம்பவான் என தேடிப் பார்த்தபோது அது வேறு யாருமில்லை தற்போது வடமாகாண ஆளுநராக வேண்டும் என்ற கனவோடு புறப்பட்ட ஒருவரே அவா். ஆளுநா் பதவி கிடைக்காது என 100 வீதம் அறிந்தபின் சரி முதல்வர் பதவியாவது கிடைக்கும் என தேர்தலில் களம் இறங்கப் போகிறார்.

இதில் என்ன விடையம் என்றால் ஆளுநர் பதவிக்கு பலபேருடைய காலை பிடித்து ஆகிவிடலாம் இது மக்களின் காலை பிடிக்க வேண்டும் என்பது சிலவேளை அவருக்கு புரியாமல் இருந்திருக்கலாம் இருந்தாலும் அவருடைய நண்பர்கள் அவர்களுக்கு கூறி இருப்பார் இது மக்கள் உங்களுக்கு வாக்களித்தால் தான் உறுப்பினராக முடியும் என்பதை.

அதன் பின் யாழ் மாநகர சபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் தான் முதல்வராக முடியும் என்றும் கூறியிருப்பார்கள்.

ஆளுநர் பதவியை விட இது கொஞ்சம் கஷ்டம் தான் வேறு வழியின்றி றை பண்ணிப் பார்ப்போம் என ஜாம்பவான் நினைத்திருக்கக் கூடும் அதற்கு உறுதுணையாக பருத்தித்துறை முனையில் இருப்பவர் உற்சாகப்படுத்தியுள்ளார்.

இவரை பாராட்டியே ஆக வேண்டும் இவர் பதவிகளுக்காக முயற்சி செய்யும் இடைவிடாத ஒரு முயற்சியாளன்.

ஆரம்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகி விட வேண்டும் என்று கனவோடு புறப்பட்ட நிலையில் தமிழரசு கட்சி அல்லது அப்போதைய தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜாம்பவானை கணக்கெடுக்கவில்லை.

சரி முதல் முயற்சி பயனளிக்கவில்லை என அறிந்து கொண்ட ஜாம்பவான் சற்றும் தளராமல் பல வருடங்களுக்குப் பின்னர் நடைபெற்ற முதலாவது வடக்கு மாகாணசபை தேர்தலில் பொது வேட்பாளராக நின்று முதலமைச்சராகி விடலாம் என முயற்சிகளை மேற்கொண்டார் அதுவும் பலிக்கவில்லை.

சரி யாராவது இடம் தந்தால் வேட்பாளராக களம் இறங்கி அமைச்சுப் பதவியை பிடிக்கலாமென கணக்குப் போட்டார் அந்தக் கணக்கை எந்தக் கட்சிகளும் கண்டுக்கவே இல்லை.

இவ்வளவு புறக்கணிப்புக்கள் மத்தியிலும் சலிக்காமல் நான் ஒரு கட்சியின் தலைவராகி விடலாமென நம்பிய ஜாம்பவான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து போராளிகள் கட்சி என்ற ஒரு கட்சியை ஆரம்பித்தார்.

சகுனம் சரியாக அமைந்து விட்டதாக எண்ணி ஜாம்பவான் ஒரு நாள் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனை பார்க்கச் சென்றார்.

சந்திப்பு கை கூடியது சம்பந்தனுடன் ஜாம்பவான் பேசுகிறார் கையில் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார் சம்பந்தன்.

ஜாம்பவான் பேச ஆரம்பித்ததும் மடியில் இருந்த பத்திரிகை கொஞ்சம் கொஞ்சமாக முகத்துக்கு நேரே உயர ஆரம்பித்தது.

அதுதான் போராளிகள் கட்சியின் தலைவராக சந்தித்த கடைசி சந்திப்பு தலைவரை விட்டுவிட்டு தொண்டர்கள் ஓடி விட்டார்கள்.

சரி என்ன செய்யலாம் என ஜாம்பவான் மீண்டும் யோசிக்க வடக்கு மாகாண ஆளுநராக இருந்த றெயினோல்ட் குரே கொழும்புக்கு அழைக்கப்படுகிறார்.

அடுத்த ஆளுநருக்கு யார் எனப் பெயர்கள் அடிபடுகின்றது ஜாம்பவானும் சும்மா விடவில்லை சுமாவை பிடித்துக் கொண்டு தன்னை ஆளுநராக்கும் படி அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தூது அனுப்புகிறார்.

அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் நில்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பக்கமாக நின்றதால் தன்னுடைய செயலகத்தில் ஊடகப் பணிப்பாளராக இருந்த கலாநிதி சுரேன் ராகவனை வடக்கு ஆளுநராக மைத்திரிபால நியமித்து விட்டார்.

ஜாம்பவானின் ஆசை காற்றில் கலக்க ஜனாதிபதி தேர்தல் ஒன்று ஜனவரி 8 நடைபெற்றது அதில் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

வடமாகாண ஆளுநராக இருந்த சுரேன் ராகவன் தானாகவே தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு கொழும்புக்கு சென்றார்.

நாறல் மீனை பூனை பார்த்ததுபோல் வடமாகாண ஆளுநரின் கதிரையை பிடித்து விட வேண்டும் என்ற ஆசை ஜாம்பவானை விட்டு வைக்கவில்லை.

ஓடினார் கொழும்புக்கு புது வேட்டி சட்டையுடன் என்னை ஆளுநராக்குங்கள் என கொழும்பில் இருக்கும் சில அரசாங்க தரப்பு ஆதரவாளர்களையும் கூட்டிக்கொண்டு மஹிந்தவிடம் சென்றார் மகிந்தவும் ஜாம்பவானின் கோரிக்கையை ஏற்று விட்டார்.

பிறகு என்ன அண்ணன் தம்பி அரசாங்கம் ஆளுநர் பதவி கிடைக்கப் போகுது என நம்பிக்கையுடன் கொழும்பில் நின்ற ஜாம்பவனுக்கு காத்திருந்தது ஓர் அதிர்ச்சி செய்தி.

அது என்ன செய்தியாக இருக்கும் என பலர் இன்னும் அறிந்திருக்க மாட்டார்கள் யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தனது நீண்ட நாள் ஆத்திரத்தை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மீது தன் ஆஸ்தான வித்துவானான சுமோ அவர்களுக்கு முன்னால் வைத்து புகழ்வது போல் இகழ்ந்த தருணம்.

சரி தனக்கு ஆசனம் வழங்காத மாவை சேனாதிராஜாவை கழுவி ஊத்தியாச்சு காணும் என விட்டிருக்கலாம் ஜாம்பவான் பின்னர் பேசிய விடையம் தான் குளிக்க போய் சேறு பூசிய கதையாக மாறியது .

அப்படி என்ன பேசிருப்பார் என பலரும் யோசித்திருப்பார்கள் தமிழர்களின் இரத்தத்தை குடித்த "இரத்தக்காட்டேரி" கோட்டபாய என சஜித்தைக்கு ஆதரவு கேட்க போய் ஜாம்பவான் மாட்டி விட்டார்.

அதாவது ஜாம்பவான் பேசிய காணொளி கோட்டாவின் பார்வைக்கு செல்ல புது வேட்டியுடன் புறப்பட்ட ஜாம்பவான் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து இறங்கினார்.

வடக்கு ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் நியமிக்கப்படுகிறார்.

எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என மனதுக்குள் புலம்பல்கள் இருந்தாலும் சகுனம் பார்த்து காத்திருந்த ஜாம்பவான் கோட்டபாய ஆட்சியில் இருந்து துரத்தப்பட மீண்டும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகிறார்.

ரணில் ஜனாதிபதியாக வந்ததும் ஜாம்பவானின் மனதில் ஒரு புன்னகை கேக் வெட்டிய பழைய ஞாபகங்கள் மேல் எழ மீண்டும் ஆளுநர் என்ற காவடியை தூக்கிக் கொண்டு கொழும்புக்கு செல்கிறார்.

வடக்கு ஆளுநர் கோட்டாவின் ஆள் நிர்வாகம் தெரியாது சுற்று நிருபம் தெரியாது என காணும் இடமெல்லாம் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு கூறிய ஜாம்பவான் ஆளுநரை மாற்ற வேண்டுமென தூவம் போட்டுவிட்டு வந்தார் தூவம் புகைக்கவில்லை.

ஏன் புகைக்கவில்லை என தேடிப் பார்த்த ஜாம்பவான் பசில் ராஜபக்சவை சந்திக்க முடிவு செய்து தனக்கு நெருக்கமான சில வட்டாரங்களை அழைத்துக் கொண்டு பச்சிலை சந்திப்பதற்கு செல்கிறார்.

சந்திப்பு ஆரம்பித்ததும் ஜாம்பவான் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார் அவரின் தகப்பாடுகள் வேறு விடையங்களை பேசிவிட்டு இறுதியாக வந்த விடயத்தை பேச ஆரம்பித்தனர்.

வடக்கு ஆளுநர் சரியில்லை அவரை மாற்றங்கள் எங்களுடன் வந்திருக்கும் ஜாம்பவான் நீண்ட காலமாக ஆளுநர் பதவி கேட்கிறார் அவரை தென்னிலங்கை ஏமாற்றுகிறது என ஒருவர் பசில் முன் கூறினார்.

அவருடன் சென்ற மற்றவரும் தன் பங்குக்கு அதே தாளத்தை மூன்றாம் காலத்தில் கூற ஆரம்பிக்க பசில் ராஜபக்ஷ சிரித்து கொண்டு எழும்பிச் சென்று விட்டார்.

கைக்கு எட்டியது வாய்க்கு கட்டவில்லை என நினைத்த ஜாம்பவான் இனி தென்னிலங்கையை நம்ப முடியாது எமது பக்கத்து வீட்டு காரனை தட்டி பார்ப்போம் என சிந்தித்தார்.

இந்தியா தூதரகத்துடன் நெருங்கிய உறவை கொண்ட ஜாம்பவான் தனது கோரிக்கையை கொழும்புக்கு தெரியப்படுத்தினார்.

அவர்கள் குணம் தெரிந்துதான் குதிரைக்கு கொம்பு கொடுக்கவில்லை என மனதில் எண்ணிக் கொண்டு அவரது கோரிக்கையை சற்று ஓரமாக வைத்தனர்.

யாழ்பாணத்தில் சீனர்கள் வந்து விட்டார்கள் என பக்கத்து வீட்டு இந்தியர்களை தட்ட ஆரம்பித்த ஜாம்பவான் இந்தியாவின் பார்வை தனது பக்கம் திரும்பும் என மனக்கணக்கு போட்டார்.

இந்தியாவின் பார்வையும் திரும்பியது யாழ்பாணத்தில் சீனா சீனா என முகப்புப் பக்கத்தில் எழுவாய் பயனிலையில் வாக்கியம் அமைத்து உயிரெழுத்துடன் உயிர் மெய் சேர குற்றியலுகரமும் எழுவாய் படர்க்கையும் அணி செய்ய குதூகலத்தில் ஜாம்பவான் வலம் வந்தார்.

ஆளுநர்களுக்கான 90 விதமான வேலைகளும் முடிந்து விட்டது என நினைத்த ஜாம்பவான் இந்தியாவின் செய்தி தென் இலங்கைக்கு சென்றால் சரி என நினைத்தார்.

நேரம் நல்ல நேரம் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் குப்புசாமி அண்ணாமலையும் இலங்கை வந்தார்.

மலையாகத்தில் ஒரு நிகழ்வுக்கு வருகை தந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கும் வருகை தந்தார் தமிழ் அரசிகள்வாதிகளை சந்தித்தார்.

இதை அறிந்த ஜாம்பவான் எப்படியாவது அண்ணாமலையை சந்தித்து பாரதப் பிரதமர் மோடியின் காதுக்கு என்னை ஆளுநராக்குமாறு கூறி விட வேண்டுமென படாது பாடுபட்டார்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் சந்தித்தால் எல்லோருக்கும் தெரிந்துவிடும் என நினைத்து மன்னார் துறை உறை அருள் பாலிக்கும் திருக்கேதீஸ்வர நாதர் கௌரி அம்மாவை அண்ணாமலையை தரிசிகச் செல்வதை ஜாம்பவான் அறிந்தார்.

அண்ணாமலை உள் வீதி சுற்றும்போது தானும் வீதியை சுற்றி திருக்கேதீஸ்வரன்நாதரின் அருள் கிடைத்துவிடும் தனது கணக்கும் சரியாகிவிடும் என நினைத்து தான் கூற வந்ததை கச்சிதமாக அண்ணாமலையிடம் கூறினார்.

சம்பவம் பெரிதாகிவிட்டது ஒருவாறு ஆளுநரை கிளப்பி விட்டு கதிரையில் உட்காரலாம் என ஜாம்பவான் நம்பினார்.

ஒரு வாரம் கழித்தபின் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்தியா செல்கிறார் அங்கு பாரதிய ஜனதா கட்சியின் மூளை என்று சொல்லப்படுகின்ற உள்துறை அமைச்சர் அமிர்தாவை ஆளுநர் சந்தித்து கலந்துரையாடினார்.

பாரதிய ஜனதா கட்சியில் மோடியை தொண்டர்கள் சந்திக்கலாம் ஆனால் அமிர்தாவை சந்திப்பது அவ்வளவு இலேசான காரியம் அல்ல ஜீவன் தியாகராஜா சந்தித்து விட்டார்.

அண்ணாமலைக்கு சொன்ன செய்தி அண்ணாமலையுடனே நின்றுவிட்டது. போராட்டங்கள் பல வஞ்சனைகள் பல காட்டிக் கொடுப்புகள் பல நினைத்த பதவிகளை கைப்பற்ற முடியவில்லை.

வேறு வழி இல்லை ஆரம்பத்தில் யோசித்தது தமிழரசு கட்சியூடாக பாராளுமன்றத்திற்கு சென்று விடலாம் என பரவாயில்லை 15 வருடங்கள் கடந்த பின் ஒரு சந்தர்ப்பம் ஜாம்பவானுக்கு கிடைக்கிறது.

வட்டார மக்கள் ஆதரிப்பார்களோ தெரியவில்லை கள்ள வாக்கு போட முற்பட்டால் எமது கட்சிக்காரர்களே காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்ற ஏக்கத்துடன் மக்களிடம் சென்றுறிருக்கிறார் ஜாம்பவான்.

இவர் வென்றால் யாருக்கு லாபம் என்பது யாழ்ப்பாண மக்களுக்கு சொல்லித் தான் தெரிய வேண்டும் அல்ல.

யாருடனும் கேக் வெட்டுவோம் எவரினது காலிலாவது விழுவோம் மக்களுக்காக அல்ல! இது இரகசியம் அல்ல பரகசியமே!