நாளை முடங்குகிறது வடக்கு, தமிழர் மரபுரிமை பேரவை ஆதரவு..

ஆசிரியர் - Editor I
நாளை முடங்குகிறது வடக்கு, தமிழர் மரபுரிமை பேரவை ஆதரவு..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக திங்கட்கிழமை நடைபெற உள்ள வடக்கு கிழக்கு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழர் மரபுரிமைப் பேரவை தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் தமிழர் மீது நடத்தப்பட்ட இனவழிப்பு அங்கமாக இருக்கக்கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி பல்வேறு வடிவங்களில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வீதியில் அமர்ந்து தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்.ஆனால் இவர்களுக்கான நீதியை எந்தத் தரப்பினரும் இதுவரை பெற்றுக்கொடுப்பதற்கு ஆக்கபூர்வமாக முயற்சிக்கவில்லை.

இலங்கை அரசானது இந்த விடயத்தில் தொடர்ந்து அசமந்தமாக இருப்பதுடன்,சர்வதேசத்தின் பிடியிலிருந்து தன்னை காப்பாற்றுவதற்காக காணாமல் போணோர் பணியகத்தை அமைத்து சர்வதேசத்தையும் ,ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது.  

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக பல கண்கண்ட சாட்சியங்கள் காணப்படுகின்ற போதும் இதுவரை நீதி கிடைக்காமல் இருப்பது மனித உரிமை விடயத்தில் இலங்கை கொண்டுள்ள கருசணை அற்ற தன்மையை தெளிவாக்க் காட்டுகின்றது.

ஆகவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கவும் ,இலங்கை அரசானது பொறுப்பு கூறும்விடயத்தை மேற்கொள்ள பன்னாட்டு விசாரணையே கட்டாயம் வேண்டும் என்பதுடன்,இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்குவது நிறுத்தப்பட்டு ,

ஐ நா மனித உரிமை சபையானது இலங்கை மீது தனது அடுத்த கட்ட நடவடிக்கையை கையாள வேண்டும் எனகேட்டுக்கொள்கின்றோம். தற்போதைய சர்வதேச ஒழுங்கில் காலம் தாழ்த்தும் நீதியானது மறுக்கப்பட்ட நீதியாகவே கருதப்படக்கூடியது .

எனவே ஐ நா மனித உரிமைக் பேரவை இனியும் காலந்தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என வினயமாக்க் கேட்டுக்கொள்கின்றோம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு