உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு பாடம் கற்பிக்க வேண்டும்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும்" என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்துள்ளார்.
தலவாக்கலையில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறைகூவலை விடுத்துள்ளார்.
"மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அனுர அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது என எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியவர்கள், இன்று மக்களை ஏமாற்றுகின்றனர்.
எனவே, இந்த அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுப்பதற்காக, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
மக்களை எல்லா வழிகளிலும் ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்துக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு உப்பை கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்களே ஆட்சி பீடத்தில் உள்ளனர்.
நாட்டில் சட்டம், ஒழுங்கு அமுலில் இல்லை. பாதாளக்குழுக்கள் சட்டத்தைக் கையிலெடுத்துள்ளன. வீட்டுக்குள்ளும், நடுத்தெருவிலும் கொலைகள் இடம்பெறுகின்றன. நீதிமன்றத்துக்குள்கூட துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் நிலைமை காணப்படுகின்றது. காட்டாட்சியே நாட்டில் நிலவுகின்றது." - என்றார்.