வடக்கில் 38 ஆவா குழு உறுப்பினர்கள் கைது
வடக்கில் கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(23) நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நிகழ்த்திய உரைக்குப் பதிலளித்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் ஆவா குழு மக்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறது. இந்த ஆயுதக் குழு தாக்குதல்களிலும், கொள்ளைகளிலும் ஈடுபடுகிறது.
இந்தக் குற்றவாளிகள் அரசியல் செல்வாக்குடன் செயற்படுகிறார்கள். ஏனெனில் இவர்கள் கைது செய்யப்பட்டதும் உடனடியாகவே விடுவிக்கப்படுகிறார்கள் எனவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார,
வடக்கில் நிலைமைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சில நூறு காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 4 உந்துருளிகளும், 4 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆவா குழு அரசியல் செல்வாக்குடன் செயற்படுகிறது என்ற எந்த முறைப்பாடும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.