வீட்டில் தையல் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து காயப்படுத்திய மர்ம நபர்!
வீட்டில் தையல் வேலையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தை, பின்புறமாக வந்த மர்ம நபர் ஒருவர் வெட்டிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். பருத்தித்துறை - தும்பளைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றுப் பட்டப்பகலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 48 வயதுடைய சத்தியசோதி சிறிகௌசி என்ற பெண்ணே படுகாயமடைந்தார். இவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஆடைகளைத் தைத்துக் கொண்டிருந்தபோது பின்புறமாக வந்த நபர் ஒருவர் அவரது வாயைப் பொத்தியுள்ளார். இதனால் குறித்த நபரின் பிடியிலிருந்து விலகுவதற்காக பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்ட பெண் உரத்துக் கத்தியுள்ளார். இதன்போது குறித்த பெண்ணின் கழுத்தில் அந்த நபர் கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்த விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.