யாழ்.கோட்டையை இராணுவத்துக்கு ஒரு போதும் வழங்க கூடாது: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

ஆசிரியர் - Admin
யாழ்.கோட்டையை இராணுவத்துக்கு ஒரு போதும் வழங்க கூடாது: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாதென யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் கோட்டையில் தங்கியுள்ள இராணுவம் முற்றாக வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இடம்பெற்ற தொல்லியல் விடயம் மீதான விவாதத்தின்போது, யாழ் ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினருக்கு இடம் வழங்கும் விடயம் தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர், உரிய அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.

மேலும், யாழ் துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பின்போது பாரிய இடையூறுகளை விளைவித்த தொல்லியல் திணைக்களம், தற்போது கோட்டைக்குள்ளூம் இராணும் முகாம் அமைப்பதை எவ்வாறு அனுமதித்தது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.இதற்கு பதிலளித்த தொல்பொருள் திணைக்களம் சார்பில் பிரசன்னமாகியிருந்த அதிகாரி,

“இராணி கோட்டையில் இருபதிற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தங்கியுள்ளனர். தற்போது இராணி கோட்டையினை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் குறித்த இராணுவத்தினர் தங்குவதற்கு சிறிய அளவிலான தற்காலிக கொட்டகை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என அவ்வதிகாரி சுட்டிக்காட்டினார்.

இதன்போது அதற்கு பதிலளித்த வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,“கோட்டையில் இராணுவம் தங்குவதை நாம் அனுமதிக்க முடியாது. அத்துடன் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்வரை பொலிஸாரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதுடன், புனரமைப்பு நிறைவடைந்த பின்னர் பொலிஸாரும் வெளியேறி கோட்டையை முழுமையாக தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவரின் கருத்தை ஏற்றுக்கொண்ட இணைத்தலைவர்கள், இவ்விடயம்தொடர்பில் மத்திய அரசிற்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு