கொடிகாமத்தில் இளைஞனுக்கு வாள்வெட்டு! - வீடு புகுந்து தாக்குதல்
கொடிகாமம் பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்கள் வீட்டிலிருந்த இளைஞனுக்கு வாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொடிகாமம் வெள்ளம்போக்கடிப் பகுதியில் நேற்று இரவு 9 .30 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நான்கு மோட்டார் சைக்கிள்களில் வாள், பொல்லுகளுடன் வீட்டில் நுழைந்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டிலி ருந்த பெண்கள் பதறி ஓடவே அங்கிருந்த இளைஞன் மீது வாள் வெட்டு இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. வீட்டில் இருந்த பொருள்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தி, பொருள்களைப் போட்டு உடைத்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் படுகாயமடைந்த விஜிதரன் (வயது– 28) என்பவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டனர்.