நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மின் பிறப்பாக்கி

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு மின்பிறப்பாக்கி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பிரதேசத்திற்கான மின் விநியோகம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாது , மின் பிறப்பாக்கிகள் ஊடாகவே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்நிலையில் கடந்த வாரம் மின் பிறப்பாக்கி ஒன்று திடீரென பழுதடைந்தமையால் , நெடுந்தீவில் மின் தடை ஏற்பட்டது.
அந்நிலையில் கடந்த 10ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சந்திரசேகரம் ஆகியோரது கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தனர்.
அந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் பவானந்தராஜா மற்றும் இளங்குமரன் ஆகியோரது முயற்சியால் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு மின்பிறப்பாக்கி வழங்கப்பட்டு அதனை நெடுந்தீவினை நோக்கி அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.