யாழில் கணவன்,மனைவியை வாள்முனையில் அச்சுறுத்திக் கொள்ளை!
யாழ்.எழுதுமட்டுவாள் கிழக்குப் பகுதியிலுள்ள வர்த்தகரொருவரின் வீட்டுக்குள் நேற்று(19) அதிகாலை உட்புகுந்த நால்வர் கொண்ட குழு வீட்டிலிருந்தவர்களிடம் வாள்களைக் காட்டிக் கடுமையாக அச்சுறுத்திப் பெறுமதியான தங்கநகைகள் மற்றும் பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கறுப்புத் துணியால் தமது முகங்களை மறைத்தவாறு வீட்டின் முன்கதவினைப் பிரித்து உள்ளே சென்ற கொள்ளையர் குழு வீட்டிலிருந்த வர்த்தகரான குடும்பத்தலைவர் மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் வாள்களைக் காட்டி அசச்சுறுத்தி வீட்டிலிருந்தவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் அமரச் செய்துள்ளனர்.
பின்னர் வீடு முழுவதும் சல்லடையிட்டுத் தேடிய கொள்ளையர் குழு வீட்டிலிருந்த பெண்கள் அணிந்திருந்த ஐந்து பவுண் தங்கநகைகள் மற்றும் வீட்டுடன் இணைந்த வகையில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றைக் கொள்ளையிட்ட பின்னர் மோட்டார்ச் சைக்கிளில் பத்திரமாகத் தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பட்டுக்கமைய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.