கழிவுகளால் நிறையும் யாழ்.நகரம், பொறுப்பாளிகள் யார்..?
யாழ். அத்தியடிப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் வீதியெங்கும் பொலித்தீன் பைகள் சிதறி காற்றில் பறந்நு திரிவதால் சுற்றுச்சூழல் மாசடைவது மட்டுமல்ல
வீதி விபத்துகளும் இடம்பெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக மக்கள் மாநகர சபை மீது விசனம் தெரிவிக்கின்றனர்.
குப்பை எடுப்பதற்கான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டும் சரியான முறையில் குப்பைகளை அகற்றாத படியால் கால்நடைகள் குப்பைகளை இழுத்து வீதிக்கு விடுகின்றன.
யாழ். நகரப் பகுதியில் உள்ள இந்தப் பகுதியையே கண்டுகொள்ளாத மாநகர சபை ஏனைய பகுதிகளைக் கண்டு கொள்ளுமா? குப்பைத் தொட்டிகள் வைக்காத பகுதிகளே சுத்தமாக இருக்கின்ற போது
குப்பைத் தொட்டி வைக்கப்பட்ட இந்தப் பகுதி அசுத்தமாக இருக்கிறது. மாநகர சபையின் கவனத்திற்கு பல தடவைகள் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்.மாநகரத்தை தூய நகரமாக்குவோம் என்று சபதம் எடுத்ததோடு மாநகர சபையின் வேலை முடிந்துவிட்டதா? என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
முகப்புத்தகங்களில் தாம் செய்யும் சிறிய வேலைகளை பெரிய அளவில் காட்சிப்படுத்தி விட்டு திறமை என்று பேசிக் கொள்ளும் முதல்வர் தொடக்கம் உறுப்பினர்கள் வரை சில இடங்களை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
பதவிகள் எடுப்பவர்கள் வேலைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மாநகரத்தை தூய நகரமாக்க முடியும்.
வருடம் 6 கோடி தனது சொந்தப் பணத்தை பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு வழங்கி வரும் வாமதேவன் தியாகேந்திரன் யாழ்.நாவலர் வீதியை தானே கூட்டி குப்பையில்லாமல்வைத்திருக்கிறார்.
மக்கள் வோட்டில் பதவிக்கு வந்தவர்கள் மக்களுக்காக வீதியில் இறங்க வேண்டும். இவரைப் பார்த்தாவது தமது பணியைச் செய்ய வேண்டும்.
இதனைவிட்டு விட்டு யாழ்.நகரை தூயநகரமாக்குவோம் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் வீதியில் இறங்கினால் மக்கள் வீதியில் இறங்குவார்கள் இந்த உளவியலே தெரியாமல் ஏனைய பணிகளை இவர்களால் எப்படி செய்ய முடியும் என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர்.