யாழ். உடுப்பிட்டியில் தொடரும் கொள்ளை: வேடிக்கை பார்க்கும் பொலிஸார்!

ஆசிரியர் - Admin
யாழ். உடுப்பிட்டியில் தொடரும் கொள்ளை: வேடிக்கை பார்க்கும் பொலிஸார்!

யாழ்.வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் கடந்த ஆறு மாத காலத்தினுள் ஜந்தாவது தடவையாக வீடொன்றினில் சுமார் 47 இலட்சம் வரையிலான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

மருத்துவ சத்திரசிகிச்சையொன்றிற்காக இந்தியாவிற்கென எடுத்துச்செல்ல தயாராக இருந்த பணமே நேற்றிரவு(25) கொள்ளையிடப்பட்டுள்ளது.

வீட்டினுள் புகுந்த கொள்ளையர் இருவர் வயோதிப பெண்களைத் தாக்கிய பின்னர் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

யாழ்.உடுப்பிட்டிப் புளியடி மற்றும் அதனையண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றது.

வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலைய எல்லைக்குள் அடுத்தடுத்து இடம்பெற்று வரும் கொள்ளையினைத் தடுக்க முடியாது பொலிஸ் தரப்பு வேடிக்கை பார்ப்பதாக மக்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளனர்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அடிக்கடி சொந்த ஊரான அனுராதபுரம் சென்றுவிடுவதாகவும் இதனால் குறித்த பகுதியில் பொலிஸ்துறை செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

குறிப்பாக வீட்டில் ஆட்களில்லாத வேளைகளிலும் அதே போன்று தனித்திருக்கும் வயோதிபக் குடும்பங்களை இலக்கு வைத்தும் கொள்ளைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்ற போதும் இதுவரை குற்றவாளிகளை கண்டறியவோ, கொள்ளையிடப்பட்ட பொருட்களினை மீட்கவோ வல்வெட்டித்துறைப் பொலிஸார் தவறிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக வயோதிபக் குடும்பங்களது வீடுகளிற்கு இரவு வேளைகளில் கொள்ளையிடச் சென்ற கொள்ளையர்கள் அவர்களைத் தாக்கியிருந்ததுடன், தங்கியிருந்து உணவருந்தியும் சென்றிருந்த சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

இதனிடையே மோப்பநாய் மற்றும் தடயவியல் குழுக்கள் வழமை போல ஆய்வுகளைச் செய்திருந்த நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் அருகாகவுள்ள வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்புத் தகவல் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு