கோப்பாய் சந்திக்கு அண்மையில் விபத்து. மயிரிழையில் உயிர் தப்பினார் இளைஞன்..
கோப்பாய் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள வீதி வளைவில் நேற்றிரவு 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பட்டா ரக வாகனத்தை செலுத்தி வந்த 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தெய்வாதீனமாக உயிர்சேதங்கள் இன்றி தப்பித்துள்ளார்.
இது குறித்து தெரியவருவதாவது,
மாவிட்டபுரத்தில் இருந்து புத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு மானிப்பாய்- கைதடி வீதியூடாக பட்டா ரக வாகனத்தை செலுத்தி வந்தவர் நித்திரைக் கலக்கத்தால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில்
கோப்பாய் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள வீதி வளைவிற்கு அருகில் உள்ள வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு உயர் அழுத்த மின்கம்பத்துடன் மோதி வீட்டுக்காணியொன்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகி சரிந்து வீழ்ந்தது.
மோதிய சத்ததினால் அயலில் உள்ள வீட்டார் உடனடியாக ஓடிவந்து சாரதியான இளைஞனை மீட்டனர். இவர் ஆசனப்பட்டியை அணிந்திருந்தால் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.
வாகனத்தின் முன்பகுதி சிறிய சேதங்களுக்குள்ளாகியுள்ளது. அத்துடன் வாகனம் மோதிய மின்சாரத் தூன் முறிந்து சரிந்தது உடனடியாக மின்சார நிலையத்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதிக்கான மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
இச்சம்பவம் இடம்பெற்ற போது இரவு கோப்பாய் போக்குவரத்து பொலிஸார் அவ்வழியால் வந்தநிலையில் சாரதியிடம் விசாரணை நடத்தியதுடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காலை வருகை தந்த மின்சார சபை ஊழியர்கள் மின்விநியோகத்தினை மீள வழங்குவதற்காக முறிந்த மின்கம்பத்தினை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ் விபத்து குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.