சேலை வாங்கித் தராமையால் யாழில் மாணவி எடுத்த விபரீத முடிவு: அதிர்ச்சியில் குடும்பத்தினர் …
ஆலயத் தேர்த் திருவிழாவுக்குச் சேலை வாங்கித் தராத காரணத்தால் மனமுடைந்த 18 வயதான மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் யாழ். கொடிகாமம் எருவன் பகுதியில் நேற்றைய தினம்(10) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
யாழ். வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்பாள் ஆலயத் தேர்த் திருவிழா நேற்று முன்தினம்(09) இடம்பெற்றது. இந்த நிலையில் தனது பாடசாலைத் தோழிகள் சேலைகள் அணிந்து ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என்பதால் நானும் சேலையணிந்தே ஆலயத்திற்குச் செல்ல வேண்டுமென தாயாரிடம் விடாப்பிடியாக நின்றுள்ளார்.
ஆனால்,தாயார் கஷ்ரமான சூழ்நிலை காரணமாகக் குறித்த மாணவிக்குச் சேலை வாங்கிக் கொடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டிலுள்ள அனைவரும் ஆலயத்தின் தீர்த்தோற்சவத்துக்குச் சென்ற நிலையில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆலயத்திலிருந்து மீண்டும் வீடு திரும்பிய குடும்பத்தவர்கள் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்துச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மாணவியின் சடலத்தை மீட்டுச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.