யாழில் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்ட குழந்தை சுடுதண்ணீர் குடித்தமையால் பெரும் பரபரப்பு

ஆசிரியர் - Admin
யாழில் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்ட குழந்தை சுடுதண்ணீர் குடித்தமையால் பெரும் பரபரப்பு

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தையின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் யாழ். சங்குவேலியில் இன்று சனிக்கிழமை(09)மூன்றாவது தடவையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது யாழ். மாவட்டப் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட குழந்தை சுடுதண்ணீர் குடித்தமையாலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடந்த மாதம்-15 ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக அங்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் காய்ச்சல் குறையாத காரணத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த குழந்தை மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால்தெரிவிக்கப்பட்டுப் புதன்கிழமை(06) இரவு பெற்றோர்களிடம் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை(07) சங்குவேலியிலுள்ள குழந்தையின் வீட்டில் குழந்தைக்கு இறுதிக்கிரியைகள் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

இந்நிலையில் நண்பகல்-12 மணியளவில் உயிரிழந்த குழந்தையின் சடலத்திலிருந்து திடீரென மலம், சிறுநீர் என்பன வெளியேறியுள்ளன. அத்துடன் குறித்த குழந்தையின் உடலில் இறந்த பின்னர் ஏற்படுவது போன்று எவ்வித மாற்றமுமின்றிக் காணப்பட்டமை அங்கு நின்ற பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அப்பகுதியில் ஒருவித பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்துக் குழந்தை உயிருடனிருப்பதாகக் கருதப்பட்டு உரும்பிராயிலுள்ள விநாயகர் ஆலயமொன்றிற்கும், உடுவில் பகுதியிலுள்ள தேவாலயமொன்றுக்கும் எடுத்துச் சென்ற உறவினர்கள் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த குழந்தை இறக்கவில்லை எனப் பூசாரியொருவரால் தெரிவிக்கப்பட்டமையால் குழந்தையின் இறுதிக்கிரியை ஏற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்றுக் காலை குறித்த குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்து மீண்டும் இறுதிக்கிரியை ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் குறித்த குழந்தையின் இறுதிக்கிரியைகள் இடம்பெறுவதாகக் கேள்விப்பட்டுச் சுயாதீன ஊடகவியலாளரொருவர் குழந்தையின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சென்ற சில நிமிடங்களில் குழந்தையின் வலது கையில் சூடு காணப்படுவதாக அவரது உறவினரான இளம் பெண்ணொருவர் குழந்தையின் கையைத் தொட்டுப் பார்த்து விட்டுத் தெரிவித்தமையால் மரணச் சடங்கிற்கு வந்தவர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

அவர் இவ்வாறு கூறிய சில நிமிடங்களில் குழந்தையின் கையில் நாடித் துடிப்புக் காணப்படுவதாகக் குழந்தையின் தந்தையார் கூறியமையால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் இறுதிக்கிரியை ஏற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டு மரணச் சடங்கிற்கு வந்தவர்கள் மத்தியிலிருந்து குழந்தை தனியாகத் தூக்கிச் செல்லப்பட்டு அருகிலிருந்த வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதன் போது குறித்த குழந்தையின் உடலில் அடிக்கடி நாடித் துடிப்பு உணரப்பட்டதாக குழந்தையின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அதுமாத்திரமன்றி உடலிலிருந்து வியர்வை, மூக்கிலிருந்து மூக்குச் சளி என்பனவும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெளியேறியுள்ளது.

அத்துடன் குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து மூன்றுநாட்கள் ஆகின்ற போதிலும் உடலியல் ரீதியாக இறந்தவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் எதுவும் குழந்தையின் உடலில் ஏற்படவில்லை.இதனால்,குழந்தை உயிருடன் இருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முழுமையாக நம்பத் தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்துக் குழந்தை உயிருடன் மீண்டு வருவாள் என்ற மாறாத நம்பிக்கையில் குழந்தையின் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் இடைவிடாது வழிபாடுகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த குழந்தை நேற்று இரவு முழுவதும் சங்கானையிலுள்ள குழந்தையின் உறவினர் வீடொன்றில் பாதுகாக்கப்பட்டு மீண்டும் இன்று காலை குழந்தையின் சொந்த ஊரான சங்குவேலி கட்டுக்குளப்பிள்ளையார் கோயிலடியிலுள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

குழந்தை கண் விழிக்காத காரணத்தால் இறுதிக்கிரியை ஏற்பாடுகள் செய்யும் நோக்குடன் குழந்தையைக் கொண்டு சென்ற போதும் குழநதையின் உறவுக்காரப் பெண்ணொருவர் குழந்தை உயிருடன் இருக்கிறாள் என்பதை அங்குள்ளவர்கள் நம்ப வைப்பதற்காக வேதனை தாளாமல் சுடுதண்ணீர் பருக்கியுள்ளார்.

இதன் போது குழந்தை நான்கு தேக்கரண்டி சுடுதண்ணீர் பருகியமையால் அப்பகுதியில் மீண்டும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குழந்தை சுடுதண்ணீர் குடித்த விடயத்தை குழந்தையின் நெருங்கிய உறவுக்காரப் பெண்ணொருவர் எமது செய்தியாளருக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் பின்னர் குறிப்பிட்ட நேர இடைவெளியில் குழந்தையின் மூக்கிலிருந்து சளி மற்றும் மலம் என்பனவும் வெளியேறியுள்ளன. இதனையடுத்துக் குழந்தையின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் யாவும் மூன்றாவது தட்வையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எம்முடன் நீங்கள் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு