வலி,வடக்கு கிராமக்கோட்டு சந்தி இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பு..
வலி.வடக்கில் கட்டுவன்- மயிலிட்டி வீதியில் கிராமக்கோட்டு சந்தி வீதி இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 ஆம் திகதி காணி விடுவிக்கப்படும் போது இவ் வீதியில் 700 மீற்றர் வீதியும் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்ததால் ஒருபகுதி காணியும் விடுவிக்கப்படவில்லை.
இவ் வீதிக்கு பதிலாக தனியார் காணியூடாக இராணுவம் வீதி அமைத்து கட்டுவன்- மயிலிட்டி வீதியில் இணைத்திருந்தனர். தற்போது மீளக்குடியமர்வுக்கு மக்கள் தங்கள் காணிகளை துப்பரவு செய்துவரும் நிலையில் அமைக்கப்பட்ட வீதி தனியார் காணியூடாக செல்வதால் உரிய வீதியினை விடுவிக்குமாறு மக்கள் கேட்டிருந்தனர்.
இந்நிலையில் பற்றைகளால் சூழப்பட்டிருந்த இவ் வீதியை இராணுவத்தினர் புல்டோசரால் துப்புரவு செய்து வீதியை விடுவித்ததுதடன் அங்கிருந்த இராணுவம் முகாம் முட்கம்பி வேலிகள் பின்நகர்தப்பட்டு நேற்று மாலை தொடக்கம் 700 மீற்றர் வீதியும் முகாம் அமைந்த மக்களின் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கட்டுவன் மயிலிட்டி வீதி புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மயிலிட்டி தெற்கு வீரபத்திரர் கோயிலுக்கு அண்மையில் உள்ள வெள்ளவாய்கால் வீதி வறுத்தலை பிள்ளையார் கோயில் வரை கொங்கிறீட் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது இதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளது.