பலாலி விமான நிலையத்திற்கு மேலதிக காணி சுவீகரிப்பு ஏன்? கேள்வி எழுப்பவுள்ள சிவாஜி..
பிரதமர் தலைமையில் நடை பெறவுள்ள யாழ் மாவட்ட அபிவிருத்தி தொடர்பிலான கூட்டத்தின் போது பலாலி விமான நிலையத்துக்கு மேலதிக காணி சுவீகரிக்க வேண்டாமென கோரப்படவுள்ளது.
நாளை திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ் வரும் நிலையில் பிற்பகல் 12.30 மணிக்கு பாராளுமன்ற மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.
இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் இடம் பெறவுள்ளது. இக் கூட்டத்தின் போதே மேற்கண்ட விடயத்தை பிரதமரிடம் தெரிவிக்கவுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
வலி.வடக்கில் கட்டுவன் உட்பட பலாலி விமான நிலையத்தை சுழுவுள்ள பகுதியைச் சேர்த்த மக்களை நேற்று சனிக்கிழமை சந்தித்து பேசினேன்
அவர்கள் காணி சுவீகரிப்பதையிட்டு கவலை வெளியிட்டனர். இதனை தடுக்க வேண்டு மென கோரினார். உண்மையில் பலாலி நிலையத்துக் கு போதுமான காணி இருக்கின்ற நிலையில் பாதுகாப்பென மேலதிக காணி சுவீகரிப்பது தேவையற்ற விடயம். 1986 முதல் காணி சுவீகரிப்பதற்கு முயற்ச்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
கட்டுநாயக்க விமான நிலையமும் தாக்கப்பட்டது. ஆனால் விமான நிலையத்துக்கு அண்மையாக மக்கள் வசிக்கின்றனர். இவ்வாறான நிலையில் பலாலி விமான நிலைய விஸ்தரிப் பெனவும் பாதுகாப்பெனவும் கூறி மக்களின் காணிகள் சுவீகரிப்பது நியாய மற்ற விடயம்.
இது தொடர்பில் பிரதமர் தலைமையில் நடைபெறும் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் பிரஸ்தாபிக்கவுள்ளதுடன் அப்பகுதி மக்களிடம் இது தொடர்பில் மகஜரென்றை தருமாறு நேற்றைய சந்திப்பில் கோரியதற்கு இணங்க தரும்பட்சத்தில் மகஜரை பிரதமரிடம் கையளிக்க தயாராகவுள்ளேன் என்றார்.