யாழில் பாதுகாப்பற்ற கேபிள் இணைப்புகளால் உயிரிழப்புகள் அதிகரிப்பு!

ஆசிரியர் - Admin
யாழில் பாதுகாப்பற்ற கேபிள் இணைப்புகளால் உயிரிழப்புகள் அதிகரிப்பு!

யாழ். மாவட்டத்தில் கேபிள் இணைப்புகளை வழங்குவதற்கான பிரத்தியேக கம்பங்கள் எவையும் நடப்படவில்லை.

இலங்கை மின்சார சபை மின் விநியோகத்திற்காக அமைத்துள்ள மின் கம்பங்கள் ஊடாகவே கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கேபிள் இணைப்புகள் பாதுகாப்பற்ற வகையில் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளமையினால், பல்வேறு ஆபத்துகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.

மின்சார கம்பிகளுடன் கேபிள் கம்பிகள் உராய்வதனால், மின் ஒழுக்கு ஏற்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறு கேபிள் இணைப்பிலிருந்து பரவிய மின்சாரம் தாக்கியதில், நெல்லியடி – நாவலர்மடம் பகுதியைச் சேர்ந்த தந்தையும் மகனும் கடந்த செவ்வாய்க்கிழமை (22) காலை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சியில் மாத்திரம் இவ்வாறு மின்சாரம் தாக்கி, கடந்த காலங்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக செய்தியாளர் கூறினார்.

மற்றுமொரு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்னர், பாதுகாப்பற்ற வகையில் மின்கம்பங்களுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ள கேபிள் இணைப்புகளை அகற்றுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் மின்கம்பங்களூடாக கேபிள் இணைப்புகள் வழங்கப்படுவது தொடர்பில் அறிந்திருக்கவில்லை எனவும் ஆராய்ந்து பார்ப்பதாகவும் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்தார். ​

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு