வெளிநாட்டில் பிள்ளைகள்: மனவிரக்தியில் யாழில் தாய் தற்கொலை
வெளிநாட்டிலுள்ள தனது பிள்ளைகளை நீண்டநாட்களாகப் பார்க்க முடியவில்லை என்ற மனவிரக்தியில் வயோதிபத் தாயொருவர் கிணற்றினுள் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் யாழ். உரும்பிராய் வடக்குப் பகுதியில் நேற்றைய தினம்(23) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த வயோதிபத் தாயின் நான்கு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குறித்த வயோதிபத் தாய் தனிமையில் வாழ்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றுப் பிற்பகல் அவரது உறவினரொருவர் வீடு சென்று பார்த்த போது அவரைக் காணாமையால் வீடு மற்றும் வளவு முழுவதும் தேடியுள்ளார். இறுதியாக வீட்டுக் கிணற்றை எட்டிப் பார்த்த போது அங்கு மேற்படி வயோதிபத் தாய் சடலமாகக் காணப்பட்டமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்துக் கோப்பாய்ப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டதுடன் சடலத்தை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
இதேயிடத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் பரமேஸ்வரி (வயது-71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.