6 மாதங்களாக மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் கைது..
யாழ்.வலிகாமம் வடக்கு பகுதியில் பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுடன் கடந்த 6 மாதங்களாக மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றஞ் சுமத்தப்பட்ட நிலையில் குறித்த ஆசிரியரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது,
கொழும்பிலுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பெற்றோர் சிலர் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கு அமைவாக, எமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றது. இது தொடர்பில் நாம் விசாரணைகளை முன்னெடுத்தோம்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் 8 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட ஆசிரியரைக் கைது செய்துள்ளோம் என்று குறிப்பிட்டனர்.
‘கடந்த 6 மாத காலமாக எமது பிள்ளைகளுடன் மேற்படி ஆசிரியர் தவறான நோக்குடன் சேட்டைவிட்டு வந்துள்ளார். மேலதிக வகுப்பு என்று கூறி பிள்ளைகளை அழைத்து அவர்களுடன் தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.
மாணவிகளை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர்களை தவறான வழியில் நடத்த முற்பட்டுள்ளார். இந்த விடயங்களை வெளியில் யாரிடமும் கூறவேண்டாம் என்று அச்சுறுத்தியுள்ளார்.
இதனால் நீண்ட காலத்தின் பின்னரே பிள்ளைகள் எமக்குத் தெரிவித்தனர். நாம் அதிபரிடம் தெரிவித்தோம். அவர்கள் விடயத்தை மூடி மறைக்க முற்பட்டமையினால், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் முறையிட்டோம்’ என்று கூறினர்.