மின்சாரம் தாக்கி தந்தையும், மகனும் பலி: சோகமயமானது கரவெட்டி

ஆசிரியர் - Admin
மின்சாரம் தாக்கி தந்தையும், மகனும் பலி: சோகமயமானது கரவெட்டி

யாழ்.வடமராட்சி கரவெட்டி கரணவாய்ப் பகுதியில் மின்சாரம் தாக்கித் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர்களைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்த இளையமகன் கையில் காயமடைந்த நிலையில் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை(23) காலை இடம்பெற்றுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் கேபிள் இணைப்பில் வயரைப் பொருத்த முற்பட்ட போது அதியுயர் மின்னழுத்தம் தாக்கிய காரணத்தாலேயே தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

கேபிள் ரீவி இணைப்பு வயரில் மின்சார சபையின் உயரழுத்த மின் இணைப்பின் கம்பி தொடர்புபட்டிருந்தமையே இந்தச் சம்பவத்துக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் மயில்வாகனம் ஜெகநாதன்(வயது-50) மற்றும் அவரது மகனான ஜெகநாதன் சஞ்சீவன்(வயது-29) ஆகியோரே உயிரிழந்தவர்களாவார்கள்.

மேற்படி சம்பவத்தில் உயிரிழந்த மயில்வாகனம் ஜெகநாதன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினராவார்.

உயிரிழந்த இருவரது சடலங்களும் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு