மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பால் யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர்கள் பாதிப்பு
அரச மருத்துவர்களின் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தால் யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயார் பிரிவுக்கு வருகை தந்த நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்து கொண்ட உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாடு முழுவதும் இன்று(17) காலை 8 மணி தொடக்கம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதற்கு ஆதரவாக யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவர்களும் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவர்களின் பணிப் புறக்கணிப்பால் யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற இன்று வருகை தந்த நோயாளர்கள் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றனர்.
வெளிநோயாளர் பிரிவில் ஒரு மருத்துவர் மட்டும் நோயாளர்களை பார்வையிட்ட போதிலும் ஏனைய சிகிச்சைகள் இன்று முற்றாக செயலிழந்தன.
இதேவேளை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிர்காப்பு சேவைகளை முன்னெடுப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.