மாணவர்களின் உணர்வை மதிக்காத மாகாண சபையினருக்கு காலம் பதில் சொல்லும்! - ஒன்றியத் தலைவர்
வடக்கு மாகாண சபை தம்மை வேண்டுமென்றே புறக்கணிக்கிறது என்றும், இதற்குக் காலம் பதில் சொல்லும் என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கே.கிருஸ்ணமேனன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையினருக்கும், மாணவர் ஒன்றியத்தினருக்கும் இடையில் நேற்று முன்தினம் மாலை சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக முள்ளிவாய்க்காலில் நேற்று கலந்துரையாடல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வடக்கு மாகாண சபையினரின் கலந்துரையாடலில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பங்கேற்கவில்லை.
இது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கருத்து வெளியிடுகையில், “எமக்கு நேற்றைய சந்திப்புக்கான நேரம் அறிவிக்கப்படவில்லை. நாம் மாகாண சபை உறுப்பினர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு நேரம் அறிய முற்பட்டோம். ஆனால் அவர்கள் எமது அலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. அவர்கள் தமது நிகழ்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதிலேயே குறியாக உள்ளனர். எம்மை உள்வாங்கும் நிலையில் அவர்கள் இல்லை. நாம் மக்களுடன் மக்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்வோம். மாணவர்களின் உணர்வை மதிக்காத மாகாண சபையினருக்கு காலம் பதில் சொல்லும் என்றார்.