மதுபான சாலையில் கைகலப்பு: யாழ். சிறைச்சாலைக்குள் சந்தேகநபர் மீது தாக்குதல் - மருத்துவ சான்றிதழ் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

ஆசிரியர் - Admin
மதுபான சாலையில் கைகலப்பு: யாழ். சிறைச்சாலைக்குள் சந்தேகநபர் மீது தாக்குதல் - மருத்துவ சான்றிதழ் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் மீது சிறைச்சாலைக்குள் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

“ரெஸ்ரோரன்டுக்குள் வைத்து சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பொது மகனைத் தாக்கிய ஆதரம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியது. அதனை நீதிமன்றில் வெளிப்படு்த்தக் கூடாது என அச்சுறுத்தி சந்தேநபர் மீது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

அதனால் சந்தேகநபரின கண் புருவம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது” என மருத்துவச் சான்றிதழை முன்வைத்து சந்தேநபரின் சட்டத்தரணி நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார்.

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியிலுள்ள ரெஸ்ரோரன்டில் கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறைச்சாலை ஜெயிலர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனால் வாகனம் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சந்தேநபர் சார்பில் அவரது சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் அணைத்தமைக்கமைவாக இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

“சந்தேகநபர் யாழ்ப்பாணம், கே.கே.எஸ் வீதியிலுள்ள ரெஸ்ரோரன்டில் மது அருந்திக்கொண்டிருந்தார்.

அங்கு மது அருந்த வந்த யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவருக்கும் சந்தேகநபருக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

அதனால் இரு தரப்பும் மேல் மாடியிலிருந்து இறங்கி வந்து வீதிவரை கைகலப்பபில் ஈடுபட்டனர். அதன்போதே சிறைச்சாலை வாகனத்தின் கண்ணாடி உடைந்தது.

சந்தேகநபர் முறைப்பாட்டாளர்களின் பொறுப்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு அச்சுறுத்தல் உண்டு. எனவே சந்தேநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று சந்தேகநபரின் சட்டத்தரணி அன்றைய தினம் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

அதனை ஆராய்ந்த மேலதிக நீதிவான், முறைப்பாட்டாளரின் பாதுகாப்பில் சந்தேகநபரைத் தடுத்துவைப்பது அச்சுறுத்தலானது எனச் சுட்டிக்காட்டி அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று (8) செவ்வாய்க்கிழமைக்கு திகதியிடப்பட்டது. சந்தேகநபர் தனது சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையானார்.

“சந்தேகநபரை சிறை அலுவலர்களும் தாக்கியமைக்கான ஆதரம் ரெஸ்ரோரண்டில் பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது. அதனைப் பெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், தாமும் கைகலப்பில் ஈடுபட்டமைக்கான ஆதரம் அதில் உள்ளதை அறிந்து, சந்தேகநபரை சிறைச்சாலைக்குள் வைத்து தாக்கியுள்ளனர். இந்த விடயத்தை எவரிடமும் தெரிவிக்க வேண்டாம் எனவும் சிறை அலுவலர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் சந்தேகநபர் கொண்டு செல்ல முன்னர் அவரை பரிசோதித்து வழங்கிய மருத்துவச் சான்றிதழில் அவரது உடலில் காயங்கள் உள்ளமை தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை.

சிறைச்சாலைக்குள் இருந்த போது பரிசோதிக்கப்பட்டு வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழில் சந்தேகநபரின் கண் புருவம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சிசிரிவி கமரா பதிவைப் பெற்று இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று சந்தளநபரின் சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

அதனை ஆராய்ந்த நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், “ரெஸ்ரோரண்டின் சிசிரிவி பதிவு மன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

அந்தப் பதிவில் உள்ளவாறு தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மன்றில் முற்படுத்தப்படவேண்டும்” என்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

“சிறைச்சாலைக்குள் தாக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் பொலிஸில் முறைப்பாட்டை வழங்கவேண்டும். அது தொடர்பில் சந்மேகநபரிடம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பெறவேண்டும்” என்றும் நீதிவான் கட்டளையிட்டார்.

வழக்கு விசாரணை ஜூன் 18ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு