மணல் கடத்திய குற்றத்துக்கு சாரதிகள் இருவருக்கு தலா ரூபா 50 ஆயிரம் தண்டம் - யாழ். நீதிமன்று உத்தரவு
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மணலை ஏற்றிச் சென்ற குற்றத்துக்கு உழவு இயந்திரச் சாரதிகள் இருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமாக மணலை அகழ்ந்து ஏற்றிச் சென்ற உழவு இயந்திரங்கள் இரண்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய துர்நடத்தைத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டது. அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.
சாரதிகள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் தம் மீதான குற்றச்சாட்டை மன்றில் ஏற்றுக்கொண்டனர்.
“சாரதிகள் ஒவ்வொருவரும் 50 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்த வேண்டும். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட மணல் அரசுடமையாக்கப்படுகிறது. உழவு இயந்திரங்கள் இரண்டும் அவற்றின் பதிவு பெற்ற உரிமையாளர்களிடம் விடுவிக்கப்படவேண்டும்” என்று நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.