யாழ்.திருநெல்வேலி ஆலயத்தில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 9 பெண்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி ஆலயத்தில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 9 பெண்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு..!

யாழ்.திருநெல்வேலியில் உள்ள ஆலய திருவிழா ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 பெண்களையும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. 

கடந்த 1ஆம் திகதி காலை இடம்பெற்ற தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மத்தியில் ஊடுருவிய திருட்டு கும்பல் ஒன்று நான்கு பெண் பக்தர்களின் சங்கிலிகளை அறுத்து களவாடியுள்ளது. சங்கிலிகளை பறிகொடுத்த பெண் பக்தர்கள் 

அது தொடர்பில் ஆலய இளைஞர்களிடம் தெரிவித்ததை அடுத்து துரிதமாக செயற்பட்ட இளைஞர்கள் ஆலயத்திற்கு வந்திருந்த சந்தேகத்திற்கு இடமானவர்களை நோட்டமிட்டுள்ளனர். அதன் போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆலய வளாகத்தில் நடமாடிய 

சில பெண்களை விசாரித்த வேளை அவர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதனை அறிந்து கொண்டுள்ளனர். அதனை அடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் , 09 பெண்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 

அவர்களை ஆலயத்தில் மறித்து வைத்தவாறே சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் , 09 பெண்களையும் தமது பாதுகாப்பில் எடுத்து அவர்களை கைது செய்து விசாரணை செய்தனர். 

அதன்போது அவர்கள் தங்கள் கொழும்பு உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என கூறியுள்ளனர். அவர்களை பரிசோதனை செய்த வேளை அவர்களில் ஒருவரின் உடைமையில் இருந்து சங்கிலி ஒன்று மீட்கப்பட்டது. 

அதேவேளை குறித்த கும்பலை ஆலயத்திற்கு அழைத்து வந்து இறக்கி விட்ட முச்சக்கர வண்டி இரண்டினை அடையாளம் கண்டுள்ளனர். அதன் அடிப்படையில் முச்சக்கர வண்டி சாரதிகளை பொலிஸார் தேடி வருகின்றனர். 

அத்துடன் குறித்த பெண்களுடன் சில ஆண்களும் ஆலயத்திற்கு வந்து இருக்கலாம் எனவும் , சந்தேகம் தெரிவித்தனர். 09 பெண்களிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அவர்களை கடந்த 2ஆம் திகதி 

யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை அவர்களை இன்றைய தினம் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ,

 09 பெண்களின் விளக்கமறியலையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் நீடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதேவேளை குறித்த பெண்களை ஆலயத்திற்கு அழைத்து வந்து இறக்கி விட்ட முச்சக்கர வண்டிகள் இரண்டு தொடர்பிலும் 

இதுவரையில் தகவல்கள் தெரியாத நிலையில் கோப்பாய் பொலிஸார் தொடர்ந்து அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு