வலி,வடக்கு மயிலிட்டி வீ.சி வீதி மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டது..
வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தொடர்ந்தும் ஆக்கிரமித்து வைத்திருந்த சந்தியிலிருந்து கிராமக்கோட்டு சந்தி (Myliddy VC Road) வீதி நேற்று மாலை தொடக்கம் மக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 13 ஆம் திகதி 658 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் போது இவ் வீதியினை திறக்காது தொடர்ந்தும் இராணுவத்தினர் வீதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இதனால் மக்கள் தங்கள் காணிகள் செல்ல முடியாத சூழ் நிலை ஏற்பட்டதுடன் இராணுவத்தினர் மக்களது காணியூடாக புதிய வீதியை அமைத்து விடுவித்தனர்.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை சாந்தை சந்தியிலிருந்து கிராமக்கோட்டு சந்திக்கு செல்லும் வழமையாக இருந்த வீதி திறக்கப்பட்டது. வீதியின் இரு புறமும் உள்ள மக்களின் சில வீட்டுக் காணிகள் முட்கம்பி வேலிகள் அமைத்து இராணுவ கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றது
அங்கு தங்கள் காணியை துப்பரவு செய்ய வரும் காணி உரிமையாளர்கள் உள்ளே செல்ல முடியாத நிலையில் எப்போது எங்கள் வீட்டு காணியை விடுவிப்பார்கள் என ஏக்கத்துடன் பார்வையிடுகின்றனர். இந்நிலையில் அங்குள்ள வீடுகள் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருப்பதால் வீடுகள் ஓரளவு நல்ல நிலையிலேயே காணப்படுகிறது.