பிறந்த 3 நாளில் சிசுவை விற்ற தாயார் உள்பட மூவர் கைது - காரணம் இதுதான்
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் வசிக்கும் திருமணமாகாத இளம் பெண் ஒருவருக்கும் அவருடைய தமக்கையின் கணவருக்கும் இடையில் முறையற்ற தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்த முறையற்ற தொடர்பு காரணமாக இளம் பெண் கர்ப்பமடைந்ததுடன் அதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்து இரகசியமான முறையில் பிரசவித்துள்ளார்.
இந்த விடயம் பெண்ணின் வீட்டுக்கு தெரியாததால் பிறந்து மூன்றே நாள்களான சிசுவை இரகசியமான முறையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளரை பராமரிக்கும் பணியில் ஈடுபடுகின்ற பெண்ணொருவர் மூலமாக கை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தை வேறொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டு இரண்டு மாத காலங்கள் அங்கு இருந்துள்ளது. எனினும் பின்னர் இந்தச்சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தொலைபேசி தகவல் வழங்கப்பட்டு அவர்கள் மூலமாக யாழ்ப்பாண சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸாரினால் குழந்தை மீட்கப்பட்டதுடன் குழந்தையின் தாயார், குழந்தையை விற்பனை செய்வதற்கு உதவிய பராமரிப்பாளர் மற்றும் குழந்தையின் தந்தை ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர்.
யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. குழந்தையையும் தாயாரையும் நம்பிக்கை இல்லத்தில் சேர்ப்பிக்குமாறு சிறுவர் நன் நடத்தை உத்தியோகத்தருக்கு உத்தரவிட்ட நீதிமன்று, ஏனைய இருவரையும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.