45 லட்சம் காசோலை மோசடிக் குற்றச்சாட்டில் தபாலதிபர் விளக்கமறியலில்
45 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தபாலதிபரை வரும் 16ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று (2) உத்தரவிட்டது.
அனுராதபுரம் பகுதியில் தபாலதிபராக கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்தேகநபர், அநுராதபுரத்தைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 45 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு திருப்பிக் கொடுக்காமல் அவரை ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முறைப்பாட்டாளரான முஸ்லிம் வர்த்தகரே வியாபாரத் தேவைகளுக்காக பணத்தை பெற்றதாகவும் அவரது காசோலைகள் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
பொலிஸாரின் விசாரணை நடவடிக்கைகள் முடிவு பெறாமையால் சந்தேகநபரை இந்த மாதம் 16ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.