யாழில் வாள்வெட்டுக் குழுச் சந்தேகநபர்கள் எண்மர் அதிரடியாக கைது
யாழில் வாள்வெட்டுக் குழுச் சந்தேகநபர்கள் எட்டுப் பேரைப் பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவரும், ஆவாக்குழுவின் ஒளிப்படத்தில் இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் அறுவருமாக எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் இன்று (28)தெரிவித்தனர்.
கொக்குவில் பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் வீடுபுகுந்து நடாத்திய தாக்குதலில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கொக்குவில், தெல்லிப்பழை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 வயதுடைய இருநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் வாள்வெட்டுக் குழு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஏனைய ஆறுபேரிடமும் மானிப்பாய்ப் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.