யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவதினரின் குருதி

ஆசிரியர் - Editor I
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பலரின் குருதியில் கலந்திருப்பது இராணுவதினரின் குருதி

 

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் பலரின் குருதியில் கலந்திருப்பது சிங்கள குருதிதான். அங்கு குருதி தேவைப்படும் போது, இராணுவத்தினரே அதனை வழங்குகின்றனர். 

இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் இதே கருத்தை அவர் வெளியிட்டிருந்தார். புங்குடுதீவில் இன்று பெற்ற நிகழ்விலும் அதனை மீள அவர் கூறினார்.

தமிழ் தலைவர்கள் சம்பந்தன், மாவை சேனாதிராசா விக்னேஸ்வரன், சுமந்திரன் மற்றும் நீதிபதி இளஞ்செழியன் ஆகியோரின் பாதுகாப்புக்கு  சிங்களப் பொலிஸாரே அமர்த்தப்பட்டுள்ளார்கள். அவர்களால் ஏன் தமிழ் பொலிஸாரை பாதுகாப்புக்கு அமர்த்த முடியாது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புங்குடுதீவு  அம்பலவாணர் கலை அரங்கத்தின்  முதலாம் ஆண்டு நிறைவுவிழா  நிகழ்வு இன்று நடைபெற்றது.

ஆளுநரின்  செயலாளர் சட்டத்தரணி எல். இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த   நிகழ்வில் பிரதம  விருந்தினராக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கலந்துகொண்டார்.

அதில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றே விரும்புகின்றனர். 

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் மகன் யாரைத் திருமணம் முடித்தார். சிங்களத் தலைவர் வாசுதேவ நாணயக்காரவின் மகளையே அவர் திருமணம் முடித்தார். நாட்டின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மனைவி தமிழ் பெண். 

மகிந்த ராஜபக்சவின் தங்கையை முடித்தவர் தமிழர் நடேசன். அதனால்தான் சொன்னேன், மகிந்த ராஜபக்ச உங்களுடைய மச்சான் என்று.

வெள்ளவத்தையில் சென்று பாருங்கள், அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கோயில்களைக் கட்ட முடியும். 

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் வேல் எடுத்து வரும் போது இராணுவத்தினரே அங்கு உள்ளனர். தென்னிலங்கையில் பெளத்த விகாரைகளுக்கு இந்து தெய்வ விக்கிரகங்களே உள்ளன. புத்தரும் இந்துக் கடவுளும் அமைதியாக ஒற்றுமையாக உள்ள போது, அவற்றை வழிபடும் மக்களே சண்டை பிடிக்கின்றனர் - என்றார்.

புங்குடுதீவு வாழ் மக்களின்  கலை கலாசார தொழில் பயிற்சிகளை மையமாக கொண்டு புலம்பெயர்து வாழும் புங்குடுதீவு மக்களினால் கலை அரங்க  மண்டபம் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இரண்டு  புதிய கட்டடங்களை உள்ளூர்  மற்றும் கனடா  வாழ் மக்களால் அமைக்கப்பட்டு ஆளுநர் ரெஜினோல்ட்  குரே இன்று திறந்து வைத்தார்.

நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை  பணிப்பாளர்  மருத்துவர் த. சத்தியமூர்த்தி , மருத்துவர் ஸ்ரீகிருஷ்ண , பிரதேசபை உறுப்பினர்கள் என பலர்கலந்து கொண்டனர் .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு