வலி. தெற்கு பிரதேச எல்லையில் வெளி வியாபாரிகளுக்கு தடை - முன்னணி கொண்டு வந்த பிரேரணை சபையில் நிறைவேற்றம்

ஆசிரியர் - Admin
வலி. தெற்கு பிரதேச எல்லையில் வெளி வியாபாரிகளுக்கு தடை - முன்னணி கொண்டு வந்த பிரேரணை சபையில் நிறைவேற்றம்

சுன்னாகம் மற்றும் மருதனார்மடம் உள்ளிட்ட வலி. தெற்கு பிரதேச ஆளுகைக்குட்பட்ட  சந்தைகளில் வெளி வியாபாரிகளுக்கு இடம் வழங்குவதனையும்  பிரதேச சபை எல்லையினுள் நடைபாதை வியாபார நடவடிக்கைகளையும் தடை செய்யவேண்டும் என்ற தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனி உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் கன்னியமர்வு இன்று (11) புதன்கிழமை சுன்னாகம் பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களால் இந்தப் பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.

சபை உறுப்பினர்கள் அனைவரினதும் ஆதரவுடன் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எமது மக்களின் தற்சார்பு பொருளாதாரத்தின் அங்கமாக வாழைச்செய்கை உள்ளது. அதனடிப்படையில் வாழைப்பொத்தி, இலை, குழை, மடல் என அனைத்தையும் விற்று சந்தைப்படுத்தும் இடத்தை வேறு ஒரு தேவைக்குப் பயன்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றில்லை.

கடந்த காலங்களில் இந்தச் சந்தையில் பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாழைசார் உற்பத்தி இருந்தன. எனினும் சில காரணங்களால் சந்தைப்படுத்தலுக்குரிய வாய்ப்புக்கள் அற்ற நிலையில் இது பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது.

இதனை ஆரம்பகாலத்தில் காணப்பட்டதை விட மேலும் சிறந்தமுறையில் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தி அதன் மூலம் எமது பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டுமே தவிர, இந்த இடத்தை வேறு தேவைக்குப் பயன்படுத்துவது பொருத்தமானதல்ல.

பொலித்தீன் பாவனை நிறுத்தப்பட்டு வருகின்ற ஒரு சூழ்நிலையில் வாழை உற்பத்திப் பொருள்களின் மதிப்பு உயர்வடைந்து வருகின்றது. குறிப்பாக இலை, தடல், மடல் என்பவற்றின் மதிப்பு உயர இருக்கின்றது. இதற்கு தொழில்நுட்ப மதிப்பைக் கொடுத்து உயர்த்த வேண்டுமே தவிர, இதனை இல்லாமல் செய்யும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடாது.

மேலும் தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற பண்டிகைக் காலங்களில் சந்தைப்படுத்தி அதிக வருமானத்தையும் பெறலாம். வாழைப்பழம், இலை, பொத்தி என்பன உடனடியாகவே சந்தைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் பழுதடைந்து விடும். எனவே இதனால் எமது விவசாயிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் –  பல்வேறு விளைவுகளும் ஏற்படும்.

மேலும் தற்காலிக நடைபாதை வியாபாரிகளுக்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறித்த இந்த சந்தையை வழங்குவதற்குரிய நடவடிக்கையை இந்தப் பிரதேச சபையின் ஊடாக மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்றது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் வாழைசார் உற்பத்தியாளர்கள், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் நிரந்தர வியாபாரிகளுக்கு பெரும் நட்டத்தையும் ஏற்படுத்தும்.

சிறப்புத் தினங்களை முன்னிட்டு கடன்களைப் பெற்று கொள்வனவு செய்த பொருள்களை சந்தைப்படுத்த முடியாமலும் வேலைக்கு அமர்த்தியவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடனாளியாக மாற்றுவதாகவே அமையும். எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாம் எமது மக்களின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்க முடியாது.

எனவே பிரதேச சபையின் பிரிவுக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த விடயம் உடன் நிறுத்தப்பட்டு எமது மக்களின் பொருளாதாரம் உறுதிப்படுத்தப்படும் வரை வேறு வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதியை வழங்காது இந்த விடயம் தொடர்பாக இந்த சபையில் வாத பிரதிவாதங்களின் கருத்தின் அடிப்படையில் ஓர் சிறந்த தீர்மானத்தை இந்தச் சபை எடுக்கின்றது –  என்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு