யாழில் சரமாரி வாள்வெட்டு: ஒரே இரவில் இரு இளைஞர்கள் படுகாயம்
யாழ். தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகளில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (10) இரவு நடாத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல்களில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தெல்லிப்பழைப் பகுதியில் மோட்டார்ச் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் வீடுபுகுந்து சரமாரியாக வெட்டியதில் 19 வயதான இளைஞர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் மந்துவில் பகுதியில் வீதியில் நின்றிருந்த இளைஞர்கள் மீது மோட்டார்ச் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் துரத்தி துரத்தி நடாத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் 21 வயதான இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.