வடக்கு - தெற்கு உறவுப்பாலம் கிரிக்கெட் போட்டி
வடக்கு - தெற்கு உறவுப்பாலம் கிரிக்கெட் போட்டி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கும் மாத்தறை ராஹுல கல்லூரிக்கும் இடையே இன்று நடைபெறுகிறது.
கருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இந்த ஆட்டம் தலா 40 ஓவர்களைக் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாகும்.
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவன் மணிமாறன் மற்றும் ராஹுல கல்லூரி பழைய மாணவர் விஜேசுந்தர ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டது என ஹாட்லி கல்லூரி அதிபர் முகுந்தன் தெரிவித்தார்.
வடக்கு - தெற்கு மாணவர்களுக்கு இடையே நட்புறவை வளர்க்க இந்தப் போட்டி இரண்டாவது வருடமாக நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு மாத்தறையில் ராஹுல கல்லூரியில் முதலாவது போட்டி இடம்பெற்றது. அதில் ராஹுல கல்லூரி வெற்றி பெற்றது.
அதன் தொடர்ச்சியாக இரண்டாவது போட்டி ஹாட்லி கல்லூரி மைதானத்தில் இன்று இடம்பெறுகிறது.
"இனங்களுக்கு இடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும் வடக்கு, தெற்குக்கான உறவுப் பாலமாகவும் இந்தக் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இனவேறுபாடுகளிலின்றி நாம் ஒன்றுபட்ட இலங்கையர் என்ற வகையில் செயற்பட இது வழிசமைக்கும்" என்று ஹாட்லி கல்லூரி அதிபர் முகுந்தன் தெரிவித்தார்.
"இந்தப் போட்டியின் ஊடாக வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான உறவையும், எதிர்கால சந்ததிக்கு அமைதி மிக்க சமூகமொன்றை உருவாக்க எதிர்ப்பார்த்துள்ளோம்" என்று ராஹுல கல்லூரியின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் மனோச் மதுசங்க தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு...
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி அணிக்கும், மாத்தறை ராஹுல கல்லூரி அணிக்கும் இடையே இன்று நடந்த நட்புறவு கிரிக்கட் போட்டியில் மாத்தறை ராஹுல கல்லூரி அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி 38.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் டிலக்ஸன் 31 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் ராஹுல கல்லூரி சார்பில் சசித் மனுரங்க 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு இலகுவான இலக்குடன் துடுப்பாடிய மாத்தறை ராஹுல கல்லூரி அணி 13.4 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 90 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
வடக்கு – தெற்கு உறவுப் பாலமாக இரண்டாவது வருடம் நடத்தப்பட்ட இரண்டு கல்லூரி அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் இரண்டாவது முறையும் மாத்தறை ராஹுல கல்லூரி வெற்றிபெற்றது.