வலி. வடக்கில் 500 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிப்பு!: சுவாமிநாதன் அறிவிப்பு
யாழ்.வலி-வடக்கில் இதுவரை காலமும் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பொதுமக்களின் 500 ஏக்கர் காணிகள் மாத்திரமே எதிர்வரும்-16 ஆம் திகதி விடுவிக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக எதிர்வரும்-16 ஆம் திகதி முதல் பொன்னாலை பருத்தித்துறை வீதியூடாகப் பொதுமக்கள் பகலில் சுதந்திரமாகச் சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்படும்.
ஏற்கனவே, பொதுமக்களின் பயணத்துக்காக குறித்த வீதி திறந்து விடப்பட்ட போதும் அரச பேருந்துகள் இராணுவப் பாதுகாப்புடன் மாத்திரமே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
தற்போது குறித்த வீதியைக் காலை- 06 மணி முதல் மாலை-06 மணி வரை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படவுள்ளது எனவும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் வலி.வடக்கில் 650 ஏக்கர் காணிகள் எதிர்வரும் -16ஆம் திகதி விடுவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.