மதுபோதையில் மனைவியை அடிக்கடி கொடுமைப்படுத்தியவர் விளக்கமறியலில்…

ஆசிரியர் - Admin
மதுபோதையில் மனைவியை அடிக்கடி கொடுமைப்படுத்தியவர் விளக்கமறியலில்…

யாழ். கோப்பாய்ப் பகுதியில் மதுபோதையில் மனைவி மீது அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு கொடுமைப்படுத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி சி.சதீஸ்தரன் நேற்றைய தினம்(06) உத்தரவிட்டுள்ளார்.

கோப்பாய்ப் பகுதியில் வசித்து வரும் மேற்படி குடும்பத்தைச் சேர்ந்த கணவர் மதுபோதையில் வந்து அடிக்கடி தனது மனைவியைக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இது தொடர்பில் அவருடைய மனைவியால் இருதடவைகள் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குடும்பப் பிணக்கென்பதால் கோப்பாய்ப் பொலிஸார் கணவரை இருதடவைகள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த குடும்பத்தைச் சேர்ந்த கணவர் நேற்று முன்தினம் மீண்டும் மதுபோதையில் சென்று தனது மனைவியைத் தாக்கியுள்ளார். இதனையடுத்து மனைவி கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய கணவரைக் கைது செய்த பொலிஸார் நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இதன் போதே நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு