வீட்டுதிட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை.
கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் தமக்கு வழங்கப்பட்ட குறைந்த தொகையிலான வீட்டுத்திட்டங்களை முழுமைப்படுத்த முடியாமல் பாதுகாப்பற்ற வீடுகளில் வாழ்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கல்லாறுக்கிராமத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் காணிகளற்ற 100 குடும்பங்களுக்கு காணிகளும் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியில் மலசலகூடங்களும் வீடுகளும் வழங்கப்பட்டன.
இதில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் தமது வீடுகள் மற்றும் மலசலகூடங்களின் கட்டுமானப்பணிகளை முழுமைப்படுத்தமுடியாமல் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட பணத்தொகையினை வைத்து கட்டுமானப்பொருட்களையே கொள்வனவு செய்யமுடியாமல் தாங்கள் பெரும் சிரமங்களின் மத்தியில் இந்த வீடுகளை கட்டிமுடித்திருப்பதாகவும் இருந்தபோது வீடுகளுக்கு பாதுகாப்பான யன்னல்,
மற்றும் கதவுகள் என்பவற்றைக்கூட கட்டிமுடிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கல்வீடாக இருந்தபோதும் பாதுகாப்பற்ற வீடுகளில் வாழ்வதாக இருப்பதாகவும் மேற்படி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.