தாவடியில் விஜயகாந்த் வீட்டினுள் நுழைந்து அச்சுறுத்திய சுன்னாகம் பொலிஸார் -மனிதவுரிமை ஆ.குழுவில் முறைப்பாடு -
யாழ்ப்பாணம் தாவடிப்பகுதியில் தனிநபர் ஒருவருடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸார் வீட்டில் இருந்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கு எதிராகவே மேற்படி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது:-
தாவடி வடக்குப் பகுதியில் உள்ள பொ.விஜயகாந்த் என்பவரது வீட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணியளவில் பொலிஸ் குழுவினர் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
அங்கு வந்த பொலிஸார் வீட்டின் முன்பாக இருந்த மரங்களை முறித்து கொண்டு வீட்டில் இருந்தவர்களை தாக்கும் நோக்கில் வந்துள்ளனர். அங்கு வந்த பொலிஸார் வீட்டு உரிமையாளரான விஜயகாந் என்பவர் எங்கே என்று வினவியுள்ளனர். அவர் வீட்டில் இல்லை என்று அங்கிருந்தவர்களால் தெரிவிக்கப்பட்ட போதும், அதனை பொருட்படுத்திக் கொள்ளாது வீட்டிற்குள் புகுந்து பொலிஸார் தேடுதல் நடத்தியுள்ளர்.
இதன் பின்னர் அயல் வீட்டிலும் தீவிர தேடுதல் நடத்திய பொலிஸார் விஜயகாந் என்பவர் கிடைக்காத நிலையில், வீட்டில் இருந்தவர்களை கடுமையாக அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.இவ் அத்துமீறலை நடத்திய பொலிஸ் குழுவில் சிவில் உடைகளிலும் சிலர் இருந்தாக அச்சுறுத்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருடைய குறித்த அத்துமீறல் செயலுக்கு முன்னர் தாவடிப் பகுதியில் போக்கவரத்து கடமையில் இருந்த பொலிஸாருடன் குறித்த விஜயகாந் என்பவர் முரண்பட்டுக் கொண்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.