வடமாகாண முதலமைச்சருடன் தொண்டர் ஆசிரியர்கள் சந்திப்பு VIDEO
வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்துக்கு முன்பாக வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிரந்தர நியமனம் வழங்க தாமதமாவதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்தைச்சேர்ந்த தொண்டராசிரியர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாண சபை முன்பாக வடமாகாண தொண்டராசாரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாகாணத்திலுள்ள 680 தொண்டராசாரியர்களில் 182 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அதில் முறைகேடுகள் இடம்மெற்றுள்ளதாகவும் அதை நிறுத்தி சகல தொண்டராசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வடமாகாண தொண்டராசிரியர்கள் 400 மேற்பட்டவர்கள் கடந்த காலங்களில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
அதனையடுத்து 182 பேருக்கான நிரந்தர நியமனம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலையீட்டால் நிறுத்தப்பட்டிருந்தது. எனினும் 182 பேருக்கும் இந்த மாதம் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவைச்சேர்ந்த ஆசிரியை நேற்றையதினம் தற்கொலை
செய்ததாக தொண்டர் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து வடமாகாண சபை கட்டடத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று ஒன்றுகூடிய தொண்டராசிரியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களை வடமாகாண முதலமைச்சர் அழைத்து சந்தித்ததுடன் இந்தவிடயம் தொடர்பில் கேட்டறிந்தார்.
இந்த விடயம் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சுக்கு உடன் தெரியப்படுத்தி தாம் பதிலை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் முதலமைச்சர் உறுதியளித்தார்.