சொந்தக் காணிகளை துப்புரவு செய்யவிடாது தடுத்து இராணுவம் அடாவடி..! நோில் தலையிட்ட ரவிகரன்..

ஆசிரியர் - Editor I
சொந்தக் காணிகளை துப்புரவு செய்யவிடாது தடுத்து இராணுவம் அடாவடி..! நோில் தலையிட்ட ரவிகரன்..

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை பகுதியிலுள்ள கரிவேப்ப முறிப்பு, எருக்கலம்பிலவு மற்றும், நெடுங்கேணி கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட தனிக்கல்லு ஆகிய வயற்காணிகளை, 

பெரும்போக நெற்செய்கைக்காக விவசாயிகள் துப்பரவு செய்யும்போது, இராணுவத்தினர் குறித்த வயற்காணிகளைத் துப்பரவு செய்வதைத் தடுத்துள்ளனர். இராணுவத்தினுடைய குறித்த அடாவடிச் செயற்பாட்டு தொடர்பான தகவலை, 

விவசாயிகள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் குறித்த இடத்திற்கு நேரில் சென்று நிலைமை ஆராய்ந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலைப் பகுதியில், கருவேப்ப முறிப்பு குளத்தின் கீழ் உள்ள சுமார் 250ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களிலும், எருக்கலம்பிலவிலுள்ள 350ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களிலும், அதேவேளை வவுனியா மாவட்டத்தின் 

நெடுங்கேணி கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட தனிக்கல்லு குளத்தின் கீழுள்ள 350 ஏக்கருக்கும்மேற்பட்ட வயல் நிலங்களிலும் அங்குள்ள தமிழ் விவசாயிகள் பன்நெடுங் காலமாக நெற்பயிற்செய்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அத்தோடு கடந்த கால அசாதாரண நிலைகள் காரணமாக, குறித்த பயிர்ச் செய்கை நிலங்களில், சில காலங்கள் பயிற்செய்கை நடவடிக்கைகள் இடம்பெறாத காரணத்தினால், அவ் வயல் நிலங்களில் ஒரு பகுதி சிறிய பற்றைக் காடுகளாக காணப்படுவதுடன், 

மறுபகுதி காணிகளில் அங்குள்ள தமிழ் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட காலத்திலிருந்தே விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவந்துள்ளனர்.இந் நிலையில் 02.08.2020 இன்றையநாள் குறித்த வயல் நிலங்களில் பெரும்போக நெற்செய்கைக்கான பண்படுத்தல் 

மற்றும், பற்றைக் காடுகளாக உள்ள பகுதிகளைத் துப்பரவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அக்காணிகளுக்குரிய விவசாயிகள் ஈடுபட்டிருந்நனர். அப்போது அங்கு வந்த இராணுவத்தினர், குறித்த பகுதியில் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாதெனத் தடுத்திருந்தனர்.

இது தொடர்பில் அப்பகுதி விவசாயிகளால் தெரியப்படுத்தப்பட்டதற்கமைய, குறித்த இடத்திற்கு வருகைதந்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் நிலைமைகளை ஆராய்ந்தார். விவசாயிகளிடம் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் இருப்பின், 

அனுமதிப் பத்திரங்களின் பிரதிகளை தம்மிடம் ஒப்படைத்துவிட்டு குறித்த காணிகளில் துப்பரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்தினர் ரவிகரன் அவர்களிடம் தெரிவித்திருந்தனர்.இந் நிலைமைகள் தொடர்பில் மாவட்ட செயலர் 

மற்றும், உரிய பிரதேசசெயலர்களுக்கு அப்பகுதி கமக்காரஅமைப்பினரால் தொலைபேசியூடாகத் தெரியப்படுத்தப்படடிருந்தது. அந்தவகையில் தற்போது பொதுத்தேர்தலுக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதால், 

எதிர்வரும் 10ஆம் திகதியன்று குறித்த பிரச்சினைதொடர்பில் ஆராய்வதாக மாவட்ட மற்றும் பிரதேசசெயலர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இங்கு ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், இந்தப் பகுதிகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் 

விவசாயத்தயே நம்பி வாழும் மக்களாக உள்ளனர். இந் நிலையில் தமது விவசாய நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்வதை தடுப்பதன் மூலம், தமது அன்றாட வாழ்வாதாரத்நினை சீர்குலைக்கும் செயற்பாட்டில் இராணுவத்தினர் ஈடுபடுவதாகவே 

அந்த மக்கள் ஆதங்கப்படுகின்றனர். இந் நிலை தொடர்ந்தால், தாம் தமது பகுதிகளிலிருந்து வெளியேறப்போவதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.வெளியேற வேண்டியவர்கள் இந்த மக்கள் அல்ல, இவ்வாறு அடாவடியாக எமது மக்களின் வாழ்வாதார நிலங்களை 

ஆக்கிரமிக்கும் இராணுவத்தினரே இங்கிருந்து வெளியேற்றப்படவேண்டியவர்களாவர்.மேலும் உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடிய கவனத்துடன் செயற்படுவதையே நாம் விரும்புகின்றோம். அரச அதிகாரிகள் எண்ணியிருந்தால், 

இந்தப் பிரச்சினைக்கு இன்றே தீர்வைக் கண்டிருக்க முடியும். சரிஅவர்கள் தெரிவித்த குறுகிய காலம் வரைபொறுப்போம்.நிச்சயமாக உரிய அதிகாரிகள் இந்த மக்களுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுககவேண்டும். 

தவறினால் அதற்குரிய நடவடிக்கையினை நாம் மேற்கொள்ளவேண்டிவரும் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு