கொரோனா பீதிக்குள் நாடு முடங்கியிருக்கையில், மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பு..!

ஆசிரியர் - Editor I
கொரோனா பீதிக்குள் நாடு முடங்கியிருக்கையில், மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பு..!

யாழ்.மிருசுவில் படுகொலை சம்பவத்தில் துாக்கு தண்டணை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்க பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இவர் விடுதலை செ ய்யப்பட்டுள்ளதுடன், சிறைச்சலையிலிருந்து இன்று பிற்பகல் வீடு திரும்பினார். 

2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி, மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு,

கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர்.அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சடலங்கள் மீட்கப்பட்டதுடன், 

ஐந்து படையினருக்கு எதிராக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

ட்ரயல் அட் பார் முறையில் நடந்த இந்த வழக்கில், 2015 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு தூக்குத் தண்டனை விதித்து, 

கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஏனைய நான்கு படையினரும் போதிய சாட்சிகளில்லை என விடுவிக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக, ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். இந்த மனு முன்னாள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா, 

நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னான்டோ ஆகிய ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது.

இதையடுத்து குற்றவாளியான ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று உயர் நீதிமன்றத்தின் 

ஐந்து நீதியரசர்களும் 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் அறிவித்தனர்.சம்பவத்தை நேரில் கண்ட மகேஸ்வரன் என்பவரின் தெளிவான சாட்சியங்களின் அடிப்படையில் 

இந்த தீர்ப்பை உறுதி செய்வதாக உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர், 

தூக்குத் தண்டனைக் கைதியான சுனில் ரத்நாயக்க விடுதலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அரசு அதனை மறுத்திருந்தது. 

இந்த நிலையில் அவர் இன்று சிறையிலிருந்து வீடு திரும்பினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு