நீதிமன்ற காணியை தாருங்கள். இளஞ்செழியன் இராணுவத்திடம் கோரிக்கை.

ஆசிரியர் - Editor I
நீதிமன்ற காணியை தாருங்கள். இளஞ்செழியன் இராணுவத்திடம் கோரிக்கை.

பருத்தித்துறையில் இராணுவத்தின் வசமுள்ள நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை மீள கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ்.இராணுவ கட்டளை தளபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை யாழ்.இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி , யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதியின் சமாதன அறையில் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்.

அதனை தொடர்ந்து இராணுவ தளபதி நீதிபதியுடன் கலந்துரையாடி இருந்தார்.

பருத்தித்துறையில் நீதிமன்றுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உள்ளது. அந்த காணியில் முன்னர் பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்திருந்தது. அக்காணியினை போர்க்காலத்தில் தம் வசப்படுத்திய இராணுவத்தினர் அங்கு 551ஆவது படைத்தளத்தை அமைத்துக்கொண்டனர்.

குறித்த காணியினை மீள கையளிக்க வேண்டும் அக் காணியினை இராணுவத்தினர் மீள கையளித்தால் அங்கு மேல் நீதிமன்றத்தினை அமைக்க முடியும் என நீதிபதி இராணுவ தளபதியிடம் கோரி இருந்தார்.

அதற்கு பதிலளித்த இராணுவ தளபதி தன்னால் முடிந்தளவு விரைந்து அக்காணியினை மீள கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

குறித்த சந்திப்பில் இராணுவ தளபதியுடன் , யாழ்.நகர தளபதி மற்றும் இராணுவ சட்ட ஆலோசகரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு