வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் எரிகாயங்களுடன் இளைஞனின் சடலம்!
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை செய்யும் இளைஞன் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலில் எரிகாயங்கள் காணப்படுவதால், மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இடைக்காடு அக்கரையைச் சேர்ந்த விஷ்ணுகுமார் தனுசன் (வயது-19) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோழிப் பண்ணையில் கழிவுத் தொட்டிக்குள் கழிவுகள் கொட்டிக் கொண்டிருந்த போது, இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இளைஞன் கீழே விழுந்து கிடந்ததைக் கண்ட ஒருவர், அவரை மீட்டு ஊரணி மருத்துவமனையில் சேர்த்த போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.