யாழில் தொடரும் கொடூரம்; இன்றும் இருவேறு வாள் வெட்டுச் சம்பவங்கள்!

ஆசிரியர் - Editor II
யாழில் தொடரும் கொடூரம்; இன்றும் இருவேறு வாள் வெட்டுச் சம்பவங்கள்!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இருவேறு மோசமான வாள் வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த சம்பவங்களில் படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி முதலாவது சம்பவம் கோப்பாய் பகுதியின் இராச வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதி வழியாக இன்று மாலை கோப்பாய் வடக்குப் பகுதியைச் சேர்ந்த எஸ்.சிறிகாந்தன் எனும் நபர் உந்துருளியில் வந்துகொண்டிருந்தபோது பிறிதொரு உந்துருளியில் இரு நபர்கள் அவரைப் பின்தொடர்ந்தவண்ணம் வந்துள்ளனர்.

இதன்போது குறித்த இருவரும் சிறிகாந்தனை அண்மித்ததும், கோப்பாய் சந்திக்கு எந்த வழியால் செல்லவேண்டும் என விசாரித்துள்ளனர். அவர்கள் கையில் கத்தி இருப்பதைக் கண்டுகொண்டதும் சிறிகாந்தன் தனது உந்துருளியைத் திருப்ப முயற்சித்துள்ளார். இதன்போது குறித்த சந்தேக நபர்கள் இருவரும் சிறிகாந்தனின் வயிற்றில் தமது கத்தியினால் குத்திவிட்டு சிறிகாந்தனின் உந்துருளியை அபகரித்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை, இரண்டாவது சம்பவம் மானிப்பாய், நவாலிப் பகுதியில் கலையரசி வீதியிலுள்ள வீட்டில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டினுள் இன்று இரவு எட்டு மணியளவில் உள் நுழைந்த பத்துப்பேர்கொண்ட வாள்வெட்டுக் கும்பல், அங்கிருந்த குடும்பஸ்தர் ஒருவரை கண்டபடி வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இதனால் அதே பகுதியைச் சேர்ந்த, 53 வயதுடைய கந்தையா தட்சணாமூர்த்தி எனும் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த இரு சம்பவங்களிலும் படுகாயமடைந்த நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில், வாள் வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு