யாழ் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்!
விதை உருளைக்கிழங்குகள் இல்லாமையால் யாழ்ப்பாணத்தில் சுமார் 2000 விவசாயிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் அரசாங்கத்தின் வேலைத் திட்டமொன்றிற்கு அமைய, யாழ்ப்பாணத்தில் 10000 விவசாயிகளுக்கு மானிய முறையின் கீழ் அரசாங்கத்தினால் விதை உருளைக்கிழங்குகள் வழங்கப்பட்டன.
எனினும், இவ் வருடம் இந்த வேலைத் திட்டம் செயற்படுத்தப்படாமையால், யாழ்ப்பாணத்தில் உருளைக்கிழங்கு விவசாயிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை, யாழில் கடந்த வருடம் அரசாங்கம் மானிய முறையில் உருளைக்கிழங்குகளை வழங்கியமையால், தனியார் துறையினரும் இம்முறை விதை உருளைக்கிழங்குகளை பெருமளவில் விற்க முற்படவில்லை எனத் தெரிகிறது.
மேலும், அரசாங்கத்தின் மானிய வேலைத் திட்டத்தின் கீழ் விதை உருளைக்கிழங்குகளைப் பெற இவ் வருடம் 2000 பேர் பதிவு செய்திருந்த போதிலும், யாழ்ப்பாணத்தில் 50 பேரே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும், இவர்களுக்கும் இம்முறை விதை உருளைக்கிழங்குகள் கிடைக்கப் பெறவில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர்.
மேலும், இந்த நிலையை சரிசெய்யும் முகமாக இம்முறை யாழ் விவசாயிகள் உருளைக்கிழங்கிற்கு பதிலாக சிவப்பு வெங்காயத்தை பயிரிடுமாறு, விவசாய துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
எனினும், அறுவடை காலத்தில் சிவப்பு வெங்காயத்திற்கான விலை பாரியளவில் வீழ்ச்சியடைவதால் அதனை பயிரிடுவது தமக்கு நஸ்டத்தை ஏற்படுத்தும் என, அப் பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர்.
ஆகவே, இந்த நிலையை கருத்தில் கொண்டு, யாழ் விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்கை வழங்கும் விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என, அவர்கள் கோரியுள்ளனர்.