கண் சத்திரசிகிச்சையில் கிருமித்தொற்று - மூன்று பேர் கொண்ட குழு விசாரணை!

ஆசிரியர் - Editor I
கண் சத்திரசிகிச்சையில் கிருமித்தொற்று - மூன்று பேர் கொண்ட குழு விசாரணை!

திருநெல்வேலியில் இயங்கி வரும் பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் போது ஒன்பது நோயாளர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காக மேல் மாகாண முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பரீட் தலைமையிலான மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வந்து விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். இந்த விசாரணைகளின் இறுதியில் கிருமித் தொற்று ஏற்பட்டமைக்கான காரணம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்படி வைத்தியசாலையில் அண்மையில் கண்புரை சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட பத்து நோயாளர்களில் ஒன்பது பேர் திடீர் கிருமித் தொற்றுக்குள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் அவர்களில் ஐவர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.ஐவருக்கும் மீள் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இந்தச் சத்திர சிகிச்சை மூவருக்கு மாத்திரமே வெற்றியளித்துள்ளது.மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏனைய நால்வரில் ஒருவர் மாத்திரமே குணமடைந்துள்ளார்.

இதேவேளை, வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலனின் உத்தரவுக்கமைய மேற்படி தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சைப் பிரிவு கடந்த மாதம் 27 ஆம் திகதி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு