அரியாலை கொலையுசம்பவம்-இரு அதிரடிப்படையினரின் விளக்கமறியல் நீடிப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்தின், அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், 24 வயதுடைய டொன் பொஸ்கோ டினேசன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், யாழ்ப்பாண தலைமையக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பேரில், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரி உட்பட, இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரையும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.