முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கடமை அது: அரசாங்கத்தினை குற்றம் சொல்வது அபத்தமானது -

ஆசிரியர் - Editor II
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கடமை அது: அரசாங்கத்தினை குற்றம் சொல்வது அபத்தமானது -

யாழ். முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்படாமல் தடுத்திருக்க வேண்டியது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், யாழ். மாநகரசபை ஆணையாளருக்கும் உரிய கடமை என வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமைக்காக அரசாங்கத்தினை குற்றம் சொல்வது அபத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஆரியகுளம், நாகவிகாரையின் விகாராதிபதியின் பூதவுடல் யாழ். முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஆரியகுளம் நாகவிகாரையின் விகாராதிபதி இயற்கை எய்திய நிலையில் அவருடைய பூதவுடல் யாழ். முற்றவெளி மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை மக்களும், ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் முன்வைக்கின்றன.

ஆனால் இருக்கும் உண்மை வேறு, விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்படுவது தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அல்லது யாழ். மாநகரசபை நடவடிக்கை எடுத்திருக்க இயலும்.

அதாவது முற்றவெளி மைதானம் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம். ஆனாலும் அந்த மைதான வளாகத்தில் வைத்து இறந்த ஒருவரின் உடலை தகனம் செய்வதற்கு நிச்சயமாக யாழ். மாநகர சபையிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.

காரணம் மயானங்கள் சம்மந்தமான சட்டங்கள் உள்ளூராட்சி சபையிடம் இருக்கின்றது. எனவே வடமாகாணசபையின் உள்ளூராட்சி அமைச்சர் என்ற அடிப்படையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுத்திருக்க வேண்டும்.

அல்லது யாழ். மாநகரசபை நீதிமன்றத்தை நாடி தடுத்திருக்க வேண்டும். எனவே பிழைகளை நம்மிடம் வைத்துக் கொண்டு மற்றவர்களை குற்றம் காண்பது மிக பிழையான ஒரு நடவடிக்கையாகும்.

முதலில் நாங்கள் எங்களை திருத்தி கொள்ளவேண்டும். வெறுமனே அறிக்கை விடுவதிலும் கேள்விகளுக்கு பதிலளிப்பதாலும் ஒன்றும் இடம்பெறப்போவதில்லை.

எனவே மக்களும் சரி, சமூக வலைத்தளங்களும் சரி, ஊடகங்களும் சரி உண்மையை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதனை செய்யாமல் அரசை எதற்கெடுத்தாலும் குற்றஞ்சாட்டுவதால் எந்த பயனும் இல்லை. நாங்கள் இதனைத் தடுத்திருக்கலாம் தடுக்கவில்லை. இதற்கு பிறகு மற்றவர்களை எப்படி குறைகாண முடியும்? குற்றம் சொல்ல முடியும்? என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு