யாழில் பிரசாரச் சுவரொட்டிகள்: மும்முரமாக அகற்றும் பொலிஸார்!
யாழ்ப்பாணம் நகரில் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் பொலிஸார் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக எமது களநிலைச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதன்படி நகரின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் பிரசாரச் சுவரொட்டிகள் தற்பொழுது அகற்றப்பட்டு வருகின்றன.
தேர்தல் பிரசார காலத்தில் பொது இடங்களில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்ந்த பதாகைகளோ சுவரொட்டிகளோ காட்சிப்படுத்துவது தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். அவற்றையும் மீறிச் செயற்படுவோரை கைது செய்து விசாரிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்கால பிரசாரக் கொடிகள், பதாதைகள், சுவரொட்டிகள் மற்றும் பசையொட்டிகள் (stickers) என்பன ஒவ்வொரு தேர்தல் வட்டாரங்களிலும் முறைப்படி அனுமதி பெற்று அமைக்கப்படும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் அலுவலகங்களிலேயே காட்சிப்படுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதான வீதிகள் மற்றும் தெருக்களிலும் தேர்தல் பிரசார வரைதல்களை மேற்கொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.