தமிழ் மக்கள் கௌரவமாக, அரசியல் உரிமைகளுடன் வாழ இந்தியா உதவ வேண்டும்! - மோடியிடம் கோரிய டக்ளஸ்

ஆசிரியர் - Admin
தமிழ் மக்கள் கௌரவமாக, அரசியல் உரிமைகளுடன் வாழ இந்தியா உதவ வேண்டும்! - மோடியிடம் கோரிய டக்ளஸ்

தமிழ் மக்கள் பாதுகாப்புடனும் அரசியல் உரிமைகளுடனும் கௌரவமாக வாழ்வதற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.அனைத்துக் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவினருக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே நேற்று டில்லியில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பின்போதே மேற்கண்டவாறு டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தார்.

இந்தியா சென்றுள்ள டக்ளஸ் தேவானந்தா , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான உயர்மட்டப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை அரசு கொண்டு வருவதாகக் கூறும் புதிய அரசியலமைப்பு ஒரு நிச்சயமற்ற தன்மையாகவே இருப்பதால் அதை உறுதிப்படுத்தவதற்கு காலதாமதம் ஆகலாம். ஆகவே, தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை அடைந்து கொள்வதற்கு இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பயனாக அமையப்பெற்ற 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிலிருந்து முன்னோக்கிச் செல்வதே நடைமுறைச் சாத்தியமாக அமையும்.

மாகாணசபை முறைமையானது ஏற்கனவே இலங்கையின் அரசியல் யாப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாலும், அதை முழுமையாக அமுல்படுத்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது அவசியமில்லை என்பதாலும், தென் இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் இன்று மாகாணசபை முறைமையை அச்சங்களற்று அனுபவிக்கின்றார்கள் என்பதாலும் இதுவே இலங்கையின் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறையாகும் என்று எடுத்துரைத்தார்.

அத்துடன், 2010ஆம் ஆண்டு உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா வந்திருந்தபோது, இந்திய அரசிடம் எமது மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தருமாறும், இன்னும் பல உதவிகளையும் கோரியிருந்தேன். அதை நிறைவேற்றித் தந்த இந்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதுபோல் தற்போது வடக்கு, கிழக்கில் எஞ்சியிருக்கும் மீள்குடியேற்றங்களை செய்வதற்கும்,பாதுகாப்பான வீட்டுவசதிகள் இல்லாதோருக்குமாக சுமார் ஒரு இலட்சம் கல் வீடுகள் எமக்கு தேவையாக உள்ளன. அந்தத் தேவையை நிறைவேற்ற இந்திய அரசு எமக்கு உதவ வேண்டும் என்று எமது மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றேன்.

யுத்தத்தால் அழிந்த வடக்கு , கிழக்கு மாகாணங்களை மீளக்கட்டி எழுப்பும் பிரதான திட்டமாகவும்,வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கவும் பலாலி விமான தளத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் சர்வதேச தரத்திற்கு இந்திய அரசு புனரமைத்துத்தர வேண்டும். அவ்வாறு பலாலி விமான தளமும், காங்கேசன்துறை துறைமுகமும் நிறைவான சேவையை வழங்குமாக இருந்தால், அது வடக்கு , கிழக்கு மக்களுக்கு மட்டுமல்லால், தென் இலங்கை மக்களுக்கும் கூடுதல் நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் நாட்டில் அகதிகளாக நீண்டகாலம் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழ் மக்கள் மீண்டும் தமது தாயகம் திரும்பி வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு வசதியாக வெளியேறும் அனுமதியை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். எனவே அந்த மக்களுக்கு வெளியேறும் அனுமதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ளவும் அவர்களின் வளமான எதிர்காலத்திற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்திய அரசும் செயற்பட வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், யுத்தத்தால் எல்லா வழிகளிலும் பின்னடைவு கண்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தையும், அங்கு பெரும் துயரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் வாழ்வியலையும் எதிர்காலம் மீதான நம்பிக்கையுடன் மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு, இந்திய அரசு தேவையான உதவியையும், பங்களிப்பையும் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு